வழிபாடு
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

Published On 2022-05-10 10:02 IST   |   Update On 2022-05-10 10:02:00 IST
குத்தாலம் பெரிய கோவில் எனப்படும் உக்தவேதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவத்தில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட 1000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலகப் புகழ் வாய்ந்த பெரிய கோவில் எனப்படும் உக்தவேதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சமயக்குரவர்கள் மூவரால் பாடல் பெற்றதும், சுந்தரர் தோல் நோய் நீக்கிய தலமாக விளங்கும் இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் 62 ஆண்டுகளுக்கு பின்பு நடந்தது.

அதன் தொடர்ச்சியாக திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. வெளிப்பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மேடைக்கு மணக்கோலத்தில் அரும்பண்ணவனமுலை அம்மையும், உத்தவேதீஸ்வரரும் எழுந்தருளினர்.

தருமபுர ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் யாகம் வளர்க்கப்பட்டு பூர்ணாகுதி யுடன் மகா தீபாராதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து மாலை மாற்றுதல், மணமகன் கையில் காப்பு கட்டுதல் உள்ளிட்ட திருமண சடங்குகள் நடைபெற்று, மாங்கல்ய தாரண நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கல்யாண உற்சவத்தை மகேஷ் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். 1000த்திற்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News