வழிபாடு
பழனி பாதவிநாயகர் கோவில் முன்பு சீர்வரிசை பொருட்களுடன் வேலன் ஆட்டம் ஆடிய சிறுவர்கள்.

பழனி முருகன் கோவிலில் சீர்வரிசை பொருட்களை படைத்து பழங்குடியின மக்கள் வழிபாடு

Published On 2022-02-04 09:41 IST   |   Update On 2022-02-04 09:41:00 IST
பழனி முருகன் கோவிலில், சீர்வரிசை பொருட்களை படைத்து பழங்குடியின மக்கள் வழிபட்டனர். பாரம்பரிய நடனம் ஆடி அவர்கள் அசத்தினர்.
பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக தைப்பூசத்திருவிழா முடிவடைந்த பிறகும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அதன்படி நேற்றும் பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் படையெடுத்தனர். அந்த வகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறவர் இன மக்கள் மற்றும் வனவேங்கைகள் கட்சியினர் சீர்வரிசை பொருட்களுடன் பழனி முருகன் கோவிலுக்கு நேற்று வந்து சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக பஸ்நிலைய பகுதியில் இருந்து மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்கு வகைகள், தேன், தினைமாவு, காய்கறிகள் உள்ளிட்டவற்றை மூங்கில்நார் கூடைகளில் பெண்கள் எடுத்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் முன்பு மேளம், பறை இசை முழங்க சிறுவர்-சிறுமிகள் வேடன்-குறத்தி போன்று வேடமிட்டு ஆடி வந்தனர்.

பின்னர் பாதவிநாயகர் கோவில் முன்பு சீர்வரிசை பொருட்களுடன் குறவர் கூத்து, வேலன் ஆட்டம், காவடி ஆட்டம் உள்பட பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்தினர். இது, அங்கு வந்த பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

இதைத்தொடர்ந்து முருகன் கோவிலுக்கு சென்று சீர்வரிசை பொருட்களை படைத்து வழிபட்டனர். இதுகுறித்து வனவேங்கை கட்சி மாநில தலைவர் இரணியன் கூறுகையில், குறவர் மகள் வள்ளியை முருகப்பெருமான் திருமணம் செய்ததால் தாய் வீட்டு சீதனமாக மலைப்பகுதியில் விளையும் பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து தரிசனம் செய்தோம். ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் வழிபட உள்ளோம். பூர்வீக தமிழ்குடி மக்களாகிய எங்களுக்கு அறுபடை வீடுகளில் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார். பேட்டியின் போது பழனி பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் சாந்தி, கோகிலாவாணி ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News