ஆன்மிகம்
பிட்டுக்கு மண் சுமந்த இறைவன்

பிட்டுக்கு மண் சுமந்த இறைவன்

Published On 2021-08-19 13:55 IST   |   Update On 2021-08-19 13:55:00 IST
ஆவணி மாதம் சிவாலயங்கள் தோறும், சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருநாளைக் கொண்டாடுவர். இந்த நிகழ்வில் பங்கேற்று வழிபாடு செய்தால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்

‘அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்’ என்பது பழமொழி. ஆண்டவனின் திருவடியைப் பற்றினால் அனைத்திலும் வெற்றி காணலாம் என்பதைக் குறிக்கும் விதத்திலே அமைந்ததுதான் அந்த பழமொழி. அப்படிப்பட்ட ஆண்டவனே, சாட்டையால் அடி வாங்கி திருவிளையாடல் புரிந்த சம்பவம் மதுரையில் நடந்தேறிய மாதமாக ஆவணி மாதம் விளங்குகிறது. ஆவணி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திரம், ‘ஆவணி மூலம்’ என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது.

அன்றைய தினம் சிவாலயங்கள் தோறும், சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருநாளைக் கொண்டாடுவர். இந்த நிகழ்வில் பங்கேற்று வழிபாடு செய்தால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். இறைவனே கூலிக்கு வேலை பார்த்த நாள் என்பதால், உத்தியோகத்தில் பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி மூலம் அன்று, சிவபெருமானை வழிபட்டால் எதிர்ப்புகள் அகன்று இனிய வாழ்க்கை அமையும்.

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இந்த நிகழ்வு மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த ஆவணி மூல வழிபாட்டில் கலந்து கொண்டால் மூல நட்சத்திர தோஷங்கள் கூட விலகிவிடும் என்பது நம்பிக்கை.

மேலும் வாழ்வில் முன்னேற்றங்கள் வந்து சேரும். மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண் இருபாலரும் இந்த விழாவில் கலந்து கொள்வது நல்லது. மூல நட்சத்திரத்தில் சிவனை வழிபட்டால் ஞாலம் போற்றும் வாழ்க்கை அமையும்.

Similar News