ஆன்மிகம்
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்

Published On 2021-08-16 09:05 IST   |   Update On 2021-08-16 09:05:00 IST
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தினசரி திருவிழா காலங்களில் காலை மற்றும் மாலையில் கோவில் வளாகத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த உபகோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் வெயிலுகந்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. காலை 7 மணிக்கு ரமேஷ் ஆறுமுகம் வல்லவராயர் மேளதாளங்கள் முழங்க ஆவணி திருவிழா கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமரம் வண்ண மலர்களாலும் பட்டாடைகளாளும் அலங்கரிக்கப்பட்டது. காலை 7.45 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பஞ்சாங்கம், தேவாரம் பாடப்பட்டது.

நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனரும், தக்கார் பிரதிநிதியுமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் கண்காணிப்பாளர் ராமசுப்பிரமணியன், கோவில் மணியம் நெல்லையப்பன், அலுவலர்கள் பிச்சையா, வேலான்டி ஒதுவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாலையில் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் உலா நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தினசரி திருவிழா காலங்களில் காலை மற்றும் மாலையில் கோவில் வளாகத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கொடியேற்றம் நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

Similar News