ஆன்மிகம்
அம்மனை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒருபகுதி.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Published On 2021-07-31 04:44 GMT   |   Update On 2021-07-31 04:44 GMT
ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அம்மனை வணங்குவதற்காக ஏராளமான பக்தர்கள் சமயபுரம் வருகிறார்கள்.

இந்தநிலையில், அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று காலையிலிருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்தனர். அவர்களில் பலர் முடிகாணிக்கை செலுத்தியும், குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து சென்றும், அக்னிச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி, கோவில் முன்புறம் தீபமேற்றினர்.

தொடர்ந்து, அவர்கள் அம்மனை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தும், கைகளில் கிருமிநாசினி தெளித்தும், முக கவசம் அணிந்த பக்தர்களை மட்டுமே கோவிலுக்குள் செல்ல பணியாளர்கள் அனுமதித்தனர்.

மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து முககவசம் அணிந்து வருகின்றனரா? என்று பேரூராட்சி பணியாளர்கள் சமயபுரம் நுழைவு வாயிலிலேயே கண்காணித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் சமயபுரம் போலீசார், ஊர்க்காவல் படையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதேபோன்று, இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவில், மாகாளிகுடியிலுள்ள உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News