ஆன்மிகம்
ராமேசுவரம் கோவில் தீர்த்த கிணறு

ராமேசுவரம் கோவிலில் தீர்த்த கிணறுகளை திறக்க யாத்திரை பணியாளர்கள் கோரிக்கை

Published On 2021-07-13 12:19 IST   |   Update On 2021-07-13 21:47:00 IST
ராமேசுவரம் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் திறப்பது குறித்து அரசு மூலம் எந்த ஒரு அறிவிப்பும் வராததால் யாத்திரை பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் ஜூலை மாதம் 5-ந் தேதி முதல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராட தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு தளர்வில் 22 தீர்த்த கிணறுகள் திறப்பதற்கு அனுமதி கிடைக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பில் பக்தர்கள் இருந்தனர். ஆனால் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகள் திறப்பது குறித்து அதிகாரப் பூர்வமாக எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

இதனால் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட தடை தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் மூடப்பட்ட நிலையில் 3 மாதங்கள் கடந்தும் தீர்த்த கிணறுகள் திறக்கப்படாததால் அதை நம்பி வாழும் 400-க்கும் மேற்பட்ட யாத்திரை பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் முழுமையாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

எனவே அடுத்த வாரம் முதலாவது தீர்த்த கிணறுகளை திறந்து பக்தர்கள் நீராட அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பதே யாத்திரை பணியாளர்கள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையாகும்.

Similar News