ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் கோவில்

திருப்பரங்குன்றம் கோவிலில் திருப்பணிகள் தொடங்குவது எப்போது?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-06-26 14:11 IST   |   Update On 2021-06-26 14:11:00 IST
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆகம விதிப்படி அடுத்த ஆண்டில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அதற்காக திருப்பணிகள் தொடங்குவது எப்போது? என்று பக்தர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 2000-ம் ஆண்டில் அஸ்தம் நட்சத்திரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் கோவில்கள் தோறும் ஆகம விதிப்படி 12 ஆண்டுக்கு ஒருமுறை திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நடத்துவது என்பது மரபு..

அதன்படி இந்த கோவிலை பொறுத்தவரை கடந்த 2012-ம் ஆண்டில் மகா கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் ஆட்சி மாற்றமும், அறங்காவலர்கள் பதவி காலமும் முடியும் நிலை ஏற்பட்டதால் ஒரு ஆண்டிற்கு முன்னதாகவே (2012-க்கு பதிலாக) 2011-ல் பூசம்  நட்சத்திரத்தில்"லகு"
கும்பாபிஷேகம்
நடந்தது.

இதில் திட்டமிட்டப்படி கோவிலின் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரத்தில் தங்க கலசம் பொருத்துவது உள்பட சில திருப்பணிகள் நடக்காமல் போனது. இதனையடுத்து கும்பாபிஷேகம் நடந்த நாளையும், அதன் நட்சத்திரத்தையும் குறிக்கும வகையில் கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து பூசம் நட்சத்திரத்தன்று வருடாபிஷேகம் நடைபெற்றது.

இந்த நிலையில் ஆகம விதிப்படி வருகின்ற 2022-ல் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படவேண்டும். இதில் திருப்பணிகுழுக்கள் அமைப்பது, திருப்பணி குழுக்களால் திருப்பணிகளுக்கு மதிப்பீடு தயார்படுத்தப்படுவதோடு அதை அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

இதற்காக குறைந்தபட்சமாக ஒரு மாதங்கள் உருண்டோடிவிடும். திருப்பணிகளுக்காக உபயதாரர்கள் தயார்படுத்தப்பட வேண்டும். அதில் ஏற்கனவே திட்டமிட்டபடி ஏழு நிலை ராஜகோபுரத்தில் தங்ககலசம் பொருத்துவதற்கு உபயதாரர்களாக தொழில் அதிபர்களை தயார்படுத்த வேண்டும். இதில் சில மாதங்கள் உருண்டோடி விடும். திருப்பணிகளில் ராஜகோபுரம் மற்றும் கோவில் முழுவதுமாக வர்ணம் தீட்டும் பணிகளில ்சில மாதங்கள் உருண்டோடி விடும்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றால் அதன் துணைக்கோவில்களான மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவில், சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் புதியபடிக்கட்டு பாதையிலுள்ள விநாயகர் கோவில் திருப்பணிகள் செய்து மகாகும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கமாகும். ஆகவே திருப்பணிகளுக்கு பல மாதங்கள்அவகாசம் தேவை.

தற்போதைய நிலையில் கோவிலுக்கு துணை கமிஷனர் நியமிக்கப்படாத நிலை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.மதுரை கோவில் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தபோதிலும் ஆனி ஊஞ்சல் திருவிழா கூட உள்திருவிழாவாக நடத்துவதற்கு கூட தன்னிச்சை முடியாத நிலை இருந்து வருகிறது.

திருப்பணிகளுக்கு தனிக்கவனம் செலுத்த துணை கமிஷனர் தேவை என்ற நிலை உள்ளது. அதனால் திருப்பணிகள் தொடர்பாக பேச்சு கோவில் வட்டாரத்தில் இல்லாத நிலை உள்ளது. மேலும் மலை உச்சியில் உள்ள காசிவிசுவநாதர் கோவிலில் ஆகமவிதிப்படி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி முடித்து இருக்க வேண்டும். ஆனால் கும்பாபிஷேகம் நடத்தப்படாத நிலையே அங்கு நீடித்து வருகிறது. இத்தகைய நிலையை தவிர்ப்பதற்காக கோவிலுக்கு துணை கமிஷனர் நியமிக்கப்படுவதோடு திருப்பணிகள் தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Similar News