ஆன்மிகம்
கோவிலில் வடக்கு வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்ட போது எடுத்த படம்.

கேரளாவில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன

Published On 2021-06-25 09:29 IST   |   Update On 2021-06-25 17:42:00 IST
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் குருவாயூர் கோவிலில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
கேரளாவில் கொரோனா பரவல் விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. நேற்று வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதன்படி கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள் உள்பட வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. அரசின் கொரோனா கட்டுப்பாடு நெறிமுறை உத்தரவுகளை பின்பற்றி ஒரே நேரத்தில் 15 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதாவது அதிகாலை 3.15 முதல் 4.15 மணி வரையும், 5.15 முதல் 6.15 மணி வரையும், காலை 8.30 முதல் 10 மணி வரையும், 10.30 முதல் 11.15 மணி வரையிலும், மாலை 5 முதல் 6.15 மணி வரையும், 6.50 முதல் 7.20 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதேபோல் குருவாயூர் கோவிலில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கேரளாவில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோவில்களும் நேற்று முதல் திறக்கப்பட்டன. ஆனால் கருவறையில் இருந்து பக்தர்களுக்கு நேரடியாக பிரசாதங்கள் வழங்கப்பட வில்லை.

கொரோனா தொற்று பரவல் விகிதம் 16 சதவீதத்திற்கும் கூடுதல் உள்ள இடங்களில் கோவில்கள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News