ஆன்மிகம்
சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா: சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை

Published On 2021-06-24 09:52 GMT   |   Update On 2021-06-24 09:52 GMT
நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழாவையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. தேர்களை சுற்றி வந்து பக்தர்கள் வழிபட்டனர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது.

9-ம் திருவிழாவான நேற்று காலையில் தேரோட்டம் நடைபெற வேண்டும். கொரோனா ஊரடங்கால் தேரோட்டம் நடைபெறவில்லை. இருந்தாலும் உற்சவர் சுவாமிகள் இருப்பிடத்தில் நேற்று காலையில் கும்பம் வைத்து, வேள்வி செய்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கால் தேரோட்டம் நடைபெறாததால் தேர் முன்பு நின்று சிவனடியார்கள் தேவாரம் பாடினார்கள்.

ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு, சுவாமி நெல்லையப்பர் தேர், அம்பாள் தேர், விநாயகர் தேர், முருகர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய தேர்களை சுற்றிவந்து வழிபட்டனர். அங்குள்ள தேரடி கருப்பசாமி கோவிலிலும் பக்தர்கள் வழிபட்டனர்.

ஒருசில பக்தர்களும், சிவனடியார்களும் தேவாரம் பாடிக்கொண்டு ரத வீதியை சுற்றி வந்தனர்.
Tags:    

Similar News