ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதியில் பக்தர்களை கூடுதலாக அனுமதிப்பது குறித்து ஆலோசனை

Published On 2021-06-18 13:26 IST   |   Update On 2021-06-18 13:26:00 IST
திருப்பதியில் சாதாரண நாட்களில் நாள்தோறும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது.
திருப்பதி :

திருமலை, திருப்பதி தேவஸ்தானத்திற்கு புதிய அறங்காவலர்கள் ஆண்டுதோறும் நியமிக்க படுவார்கள். இந்தாண்டு அறங்காவலர் குழு தலைவராக ஒய்.எஸ்.சுப்பா ரெட்டி மற்றும் 35 அறங்காவலர் குழுவினர் நியமிக்கப்பட்டனர். அறங்காவலர் குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளவர்கள் மாதந்தோறும் ஆலோசனை கூட்டம் நடத்தி தேவஸ்தானத்திற்கு தேவையான முடிவுகள் அறிவிப்பார்கள்.

இந்த ஆண்டு அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதையொட்டி நாளை (சனிக்கிழமை) அறங்காவலர் குழு கடைசி கூட்டம் அன்னமய்யா பவனில் நடைபெறுகிறது. அப்போது தேவஸ்தானத்தின் செயல்பாடுகள், வருவாய் கொரோனா தொற்று குறித்து ஆலோசனை செய்ய உள்ளனர்.

திருப்பதியில் சாதாரண நாட்களில் நாள்தோறும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் கொரோனாபரவல் காரணமாக பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது.

தற்போது ஆந்திராவில் தொற்று பரவல் குறைந்து வருவதால் கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிப்பது மற்றும் இலவச தரிசனம் டிக்கெட் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆந்திராவில் முழுமையாக பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்ட உடன் கூடுதலாக ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான தேவஸ்தான குழு பதவிக்காலம் முடிவடைந்தவுடன் அடுத்த ஆண்டுக்கான புதிய உறுப்பினர்களை ஆந்திர அரசு தேர்வு செய்கிறது.

Similar News