ஆன்மிகம்
நாகை மாவட்டத்தில் வெறிச்சோடிய ஆன்மிக சுற்றுலா தலங்கள்

நாகை மாவட்டத்தில் வெறிச்சோடிய ஆன்மிக சுற்றுலா தலங்கள்

Published On 2021-06-09 14:37 IST   |   Update On 2021-06-09 14:37:00 IST
ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளின் வரத்து அடியோடு சரிந்து விட்டது.
ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட மூம்மத ஆலயங்களும் உள்ளன. இதனால் ஆன்மிக சுற்றுலா தலம் என்று அழைக்கப்படுகிறது. மும்மதத்தினர் இங்கு வந்து வழிபட்டு செல்வதால் எப்போதும் நாகை மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படும். தற்போது ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் ஆலயங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் (மயிலாடுதுறை மாவட்டம் உள்பட) கோடியக்கரை வன உயிரின சரணாலயம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை உள்ளிட்ட சுற்றுலா தலங்களும், நவக்கிரக கோவில்களான கீழப்பெரும்பள்ளம், வைத்தீஸ்வரன் கோவில், திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோவில் உள்ளிட்ட ஆன்மிக தலங்களும் இங்கு தான் உள்ளது.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வேளாங்கண்ணி பேராலய திருவிழா, நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா, சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் வேல் வாங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற விழாக்களில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கானோர் நாகை மாவட்டத்திற்கு வருகை தருவார்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளின் வரத்து அடியோடு சரிந்து விட்டது.

Similar News