ஆன்மிகம்
கோபால்சாமி மலைக்கு செல்லும் வழியில் வனத்துறையினர் சோதனை சாவடி அமைத்து கண்காணித்த போது எடுத்த படம்.

பொள்ளாச்சி அருகே கோபால்சாமி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

Published On 2021-04-26 09:44 IST   |   Update On 2021-04-26 09:44:00 IST
பொள்ளாச்சி அருகே கோபால்சாமி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சியை அடுத்த கோபால்சாமி மலை உச்சியில் நந்தகோபாலசாமி மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதி மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் அதிகளவு பக்தர்கள் கோவிலுக்கு வருவது வழக்கம்.இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதற்கிடையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கோவில் உள்ளது. இதன் காரணமாக கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவிலுக்கு பக்தர்கள் தடையை மீறி செல்வதை தடுக்க வனத்துறையினர் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

நேற்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்களை வனத்துறையினர் திருப்பி அனுப்பினர். கோவில் பூசாரியுடன் சிலர் மட்டும் பூஜை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அங்கு ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வரும் நிலையில் அரசின் உத்தரவின்படியும், வனத்துறை அறிவுறுத்தலின்படி மலைக் கோவிலில் சாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை. சாமிக்கு நித்தியபடி பூஜைகள் மட்டும் நடைபெறும்.

பக்தர்கள் அரசின் மறு உத்தரவு வரும் வரை கோவில் நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கோவில் இருப்பதால் பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக கோவில் நடைபெறும் பூஜைகளுக்கும், கோவிலை சுத்தம் செய்தவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்றனர்.

Similar News