ஆன்மிகம்
திருக்காஞ்சி கோவில்

திருக்காஞ்சி கோவிலில் இன்று தீர்த்தவாரி நடப்பது ஏன்?

Published On 2021-02-26 06:45 GMT   |   Update On 2021-02-26 06:45 GMT
மாசிமக தீர்த்தவாரி நாளை (சனிக்கிழமை) நடப்பதாக பொதுவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருக்காஞ்சி கோவிலில் இன்று நடக்கிறது. இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி கங்கவராக நதீஸ் வரர் கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

11 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு சாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

விழாவின் 9-ம் நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. மாசிமக விழாவில் சிகர நிகழ்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) கோவில் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

மாசிமக தீர்த்தவாரி நாளை (சனிக்கிழமை) நடப்பதாக பொதுவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருக்காஞ்சி கோவிலில் இன்று நடக்கிறது. இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திருக்காஞ்சி கோவில் தலைமை அர்ச்சகர் சரவணா சிவாச்சாரியர் கூறியதாவது:-

ஆண்டுதோறும் மாசி மகத்தன்று ஆறு, குளங்களில் நடக்கும் தீர்த்தவாரிகளை மாசி மாதம் மகம் நட்சத்திரம் பிறக்கும் நேரத்தில் செய்வது ஆகம விதி. அதன் காரணமாக திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் இன்று தீர்த்தவாரி நடக்கிறது. கடற்கரை பகுதியில் நடைபெறும் தீர்த்தவாரியானது திதியை மேற்கோள்காட்டி நடை பெறுவது. எனவே பவுர்ணமி திதியை கடைப்பிடித்து நாளை நடக்கிறது. திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் கோவிலில் இன்று மதியம் 12.30 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. பக்தர்கள் சங்கராபரணி ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News