ஆன்மிகம்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பெருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2021-02-16 13:27 IST   |   Update On 2021-02-16 13:27:00 IST
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது பெருவிழாவுக்கு முன்னதாக கிராம தேவதைகளுக்கு உற்சவம் நடைபெறும். முதலில் ஆற்றங்கரையில் அமைந்துள்ள அய்யனார், செல்லியம்மன் கோவிலுக்கும், அதன்பிறகு விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள விநாயகரின் அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடான ஆழத்துக்கு விநாயகருக்கும் பத்து நாள் உற்சவம் நடைபெறும்.

அந்த வகையில் அய்யனார், செல்லியம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி, பால்குடம் எடுத்தல், செடல் உற்சவம், தேரோட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. ஆழத்து விநாயகர் உற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் தேர் திருவிழாவும், நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது.

இந்த நிலையில் நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவையொட்டி வருகிற 22-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் விபசித்து முனிவருக்கு காட்சியளித்தல் என்ற ஐதீக நிகழ்ச்சியும், 25-ந்தேதி தேரோட்டமும், 26-ந்தேதி மாசி மக தீர்த்தவாரி உற்சவமும், 27- ந்தேதி தெப்ப உற்சவமும், 28-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், மார்ச் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Similar News