ஆன்மிகம்
பழனி முருகன்

பழனி முருகனை வணங்கி ஆனந்தம் பெறுவோம்

Published On 2021-02-02 05:54 GMT   |   Update On 2021-02-02 05:54 GMT
தேன் தமிழ் சுவை பாடும் தென்னகத்தில், தனிப்பெரும் கடவுளாக வீற்றிருக்கும் முருகப்பெருமானின் திருநாமத்தை உள்ளத்தில் உரக்க சொன்னால் உள்ளமும் உலகமும் அமைதி பெறும் என்பது பக்தர்கள் அனைவரும் கண்ட உண்மை.
தேன் தமிழ் சுவை பாடும் தென்னகத்தில், தனிப்பெரும் கடவுளாக வீற்றிருக்கும் முருகப்பெருமானின் திருநாமத்தை உள்ளத்தில் உரக்க சொன்னால் உள்ளமும் உலகமும் அமைதி பெறும் என்பது பக்தர்கள் அனைவரும் கண்ட உண்மை. பழனி மலைக்கோவில், அடிவாரம் திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவிலை உள்ளடக்கியது பழனி. அழகிய குன்றுகள் நிறைந்து காட்சியளிக்கும் இப்புண்ணிய தலத்திற்கு தைப்பூச திருநாளில் வழிபடுவது கண்கொள்ளா காட்சியாகும்.

பழனி மலை மேல் உள்ள கோவிலுக்கு செல்லும் பாதையில் சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் ஆகியோரது சிற்பங்கள் புராண வரலாற்றை காட்டுகிறது. ஞான தண்டாயுதபாணியான முருகப்பெருமான் பழனியில் ஆண்டியாய், ஒரு கரத்தில் தண்டு ஏந்தி மற்றொரு கரத்தில் வேல் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆனந்த கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. அதாவது காங்கேயன், கார்த்திகேயன், சரவணன், குமரன், சண்முகன், சேனாதிபதி, குகன், வேலாயுதன், கந்தன், கடம்பன், கதிர்வேலன் ஆகிய முக்கியமான பெயர்களில் பக்தர்கள் அன்புடன் வழிபட்டு வருகின்றனர்.

போகர் என்ற சித்தர் நவபாஷாணங்களை கொண்டு பழனி மலை மீது உள்ள முருகப்பெருமானின் சிலையை உருவாக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நவபாஷாணம் காரணமாகவே அபிஷேகத்தின்போது சிலையில் படும் பன்னீர், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், திருநீறு ஆகியவை தீராத நோய் தீர்க்கும் தன்மையை பெற்றதாக மாறுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற தைப்பூச திருநாளில் வருகை தரும் பக்தர்கள் அனைவரும் முருகப்பெருமானின் அருளால் வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெற்று பேரின்ப வாழ்வு பெற வேண்டும்.
Tags:    

Similar News