ஆன்மிகம்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர்

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்

Published On 2021-01-28 07:51 GMT   |   Update On 2021-01-28 07:51 GMT
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்தவற்காக இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். அவர்கள் காலையில் கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் :

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் நடைபெறும். இதில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்றாகும்.

இன்று தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபி‌ஷகம், 8.30 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சுவாமி அலைவாய்யு கந்த பெருமான் எழுந்தருளி வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு எழுந்தருளுவார்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வழிக்காட்டு நெறிமுறைகளால் சுவாமி அலை வாயு கந்த பெருமான் உள்பிரகாரத்தில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கில் பாதயாத்திரையாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் இரவில் கோவில் வளாகத்தில் தங்கினர்.

மேலும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் இன்றும் பக்தர்கள் திரண்டு வந்தனர். தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்தவற்காக இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் காலையில் கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில் திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News