பழனிக்கு வரும் மக்களின் பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் எல்லாம் தமிழ்க்கடவுள் முருகனோடு தொடர்புடைய பண்பாட்டு கூறுகளை எடுத்துக் காட்டுகின்றன.
நட்சத்திர சிந்தாமணி எனும் நூலில் பூச நட்சத்திரத்தை பற்றி கூறுகையில், பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல மதிப்பு உடையவர்களாகவும், வழக்கறிந்து வழக்காடுவதில் வல்லவர்களாகவும், குற்றமற்ற மனநிலையில் மற்றவர்களை மகிழ்பவர்களாகவும் விளங்குவார்கள் என்கிறது. ராமாயணத்தில் பரதன் பூச நட்சத்திரத்தில் பிறந்தான் என்றும் கூறப்பட்டுள்ளது.
தைப்பூசம் அன்று வரக்கூடிய பவுர்ணமி நாளன்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலை சுற்றியுள்ள ரதவீதிகளில் நடைபெறும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கானோர் வருகின்றனர். இதனை தேர் நோன்பு என்றும் கூறுவர். இந்நாளில் மக்கள் பொங்கல் வைத்தும், கும்மியடித்தும் பழனி முருகனை வழிபடுகின்றனர். பழனி முருகன் கோவிலில் இத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உமாதேவியார் முருகனிடம் வேலை எடுத்துக் கொடுத்து தாரகன் என்னும் அசுரனை வென்று வரும்படி கூறிய நிகழ்வினை போற்றும் வகையில் இவ்விழா நடத்தப்படுகிறது என்பது ஐதீகமாகும்.
இந்நாளில் பல்வேறு நேர்த்தி கடன்களுடன் விரதமிருந்து வரும் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அதன் தாக்கம் குறையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தங்களின் வாழ்க்கை செழிப்பாகும், நினைத்த காரியம் கைக்கூடும் என்று நினைத்து பழனிக்கு வரும் மக்களின் பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் எல்லாம் தமிழ்க்கடவுள் முருகனோடு தொடர்புடைய பண்பாட்டு கூறுகளை எடுத்துக் காட்டுகின்றன.