ஆன்மிகம்
வடலூர் ஜோதி தரிசனம்

வடலூர் தைப்பூச தரிசன பெருவிழா 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2021-01-22 09:01 GMT   |   Update On 2021-01-22 09:01 GMT
வடலூரில் வருகிற 27-ந் தேதி தைப்பூச ஜோதி தரிசன திருவிழாவுக்கான கொடியேற்றமும், 28-ந் தேதி தைப்பூச திருவிழாவும் நடைபெற உள்ளது. கருத்தரங்கம், நாடகங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடலூர் :

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கோவில் திருவிழாக்கள், கடற்கரைகளில் கூட்டம் கூட அனுமதிக்கப்படவில்லை. கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளதால் வடலூரில் தைப்பூச திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

வடலூரில் இந்த ஆண்டு 150-வது ஜோதி தரிசன விழா திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் என்னும் சத்ய ஞானசபையில் நடைபெறுகிறது.

இதையொட்டி வருகிற 27-ந் தேதி தைப்பூச ஜோதி தரிசன திருவிழாவுக்கான கொடியேற்றமும், 28-ந் தேதி தைப்பூச திருவிழாவும் நடைபெற உள்ளது.

28-ந் தேதி காலை 6 மணி, 10 மணி, மதியம், 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, 29-ந் தேதி காலை 5.30 மணி என 6 காலங்கள் 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் 30-ந் தேதி திருஅறை தரிசனம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்றும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்தரங்கம், நாடகங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளான ராட்டினங்கள், கடைகள் அமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விழாவையொட்டி பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலைய நிர்வாகம் செய்து வருகிறது.

தற்போது சபை வளாகத்தில் பந்தல், தடுப்புகள் அமைக்கும் பணிகளும், தெய்வநிலைய வளாகத்தை சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News