ஆன்மிகம்
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் தாயார் உற்சவம் தொடங்கியது
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவிலில் தாயார் உற்சவம் தொடங்கியது. இதையொட்டி செங்கமல தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தாயார் உற்சவம் 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி தாயார் உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி செங்கமல தாயாருக்கு காலையில் திருமஞ்சனம் நடைபெற்றது.
பின்னர் மாலையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திவ்ய பிரபஞ்சம் மற்றும் சாற்றுமுறை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவில் உட்பிரகாரத்தில் சாமி வீதி உலா நடந்தது. இதையடுத்து செங்கமல தாயாருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
வருகிற 15-ந் தேதி மாட்டுப்பொங்கல் அன்று கணு தீர்த்தவாரியுடன் தாயார் உற்சவம் முடிவடைகிறது. இதற்கிடையே வருகிற 11-ந் தேதி ஆண்டாள் நீராட்டு உற்சவம் மற்றும் 12-ந் தேதி அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.