ஆன்மிகம்
தேர்கள் சீரமைக்கும் பணி நடந்து வருவதை காணலாம்.

அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா 10-ந்தேதி தொடங்குகிறது

Published On 2019-03-23 06:00 GMT   |   Update On 2019-03-23 06:00 GMT
அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா அடுத்த மாதம் 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அவினாசியில் புகழ்பெற்ற அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கருணாம்பிகையுடன் அவினாசிலிங்கேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழா மிக சிறப்பாக நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து அன்று இரவு 7 மணிக்கு திருமுருகநாதர் வருகை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 11-ந்தேதி சூரிய, சந்திர மண்டல காட்சிகள், 12-ந் தேதி பூத வாகனத்தில் சாமி எழுந்தருளல், அன்ன வாகன காட்சிகள், அதிகார நந்தி, கிளிவாகனம் காட்சிகள் ஆகியன நடக்கிறது. 13-ந் தேதி புஷ்ப பல்லக்கு, கைலாச வாகன காட்சியும் நடக்கிறது.

பின்னர் 14 -ந் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடக்கிறது. 15-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 16-ந் தேதி அதிகாலை பூர நட்சத்திரத்தில் சாமிகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நடக்கிறது. 17-ந் தேதி காலை 7 மணிக்கு பெரிய தேர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டம் நடக்கிறது.

18-ந் தேதி மாலை 4 மணிக்கு அம்மன் தேரோட்டமும், 19-ந் தேதி இரவு தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது. 20-ந் தேதி நடராஜர் தரிசனம், 21-ந் தேதி மஞ்சள் நீர் அபிஷேகம் நடக்கிறது. தேர்த்திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் செய்து வருகிறார். தேரோட்டத்தை முன்னிட்டு தேர்களை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

முன்னதாக தேர்த்திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்து அவினாசி தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தாசில்தார் வாணிலட்சுமி ஜெகதாம்பாள் தலைமை தாங்கினார். அவினாசி போலீஸ் துணை சூப்பிரண்டு பரமசாமி, கோவில் செயல் அலுவலர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ராயம்பாளையம், புதுப்பாளையம், சன்னைமிராசுகள், பொதுப்பணித்துறை, மின் வாரியத் துறை, பேரூராட்சினர், சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

தேரோட்டம் நடைபெறும் நான்கு ரதவீதிகளில் வைத்து பக்தர்களுக்கு சாப்பாடு கொடுக்கக் கூடாது. பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள் உபயோகப்படுத்தக் கூடாது. நான்கு ரதவீதிகளிலும் விளம்பர பதாகைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்னதானம் வழங்க நினைப்பவர்கள் தாசில்தாரிடமும், உணவு பாதுகாப்பு தூய்மை அலுவலரிடமும் முன்னதாகவே அனுமதி பெற வேண்டும்.

தேர் வலம் வரும் வீதிகளில் சிறிது நேரம் கடைகளை அடைக்க கடை உரிமையாளர்களிடம் வேண்டுகோள் வைப்பது, அவினாசியில் தேர்த்திருவிழாவை அனைவரும் அமைதி காத்து ஒற்றுமையுடன் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
Tags:    

Similar News