ஆன்மிகம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் இன்று திருக்கல்யாண விழா

Published On 2019-03-18 03:24 GMT   |   Update On 2019-03-18 03:24 GMT
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண விழா இன்று நடக்கிறது.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடைபெற்று வந்தது. இந்த கோவிலில் 575-வது திருக்கல்யாண விழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு பறக்கையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் அறம்வளர்த்த நாயகி அம்மனுக்கு புனித நீராட்டு விழா நடக்கிறது.

அம்மன் மணப்பெண் கோலத்தில் ஆஸ்ராமத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கொண்டு வரப்படுவார். மாலையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மனை வைத்து மேளத்தாளத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வருவார்கள்.

இரவு 8.30 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் தாணுமாலயசாமி கையில் திருமாங்கல்யத்தை வைத்து அருகில் அறம்வளர்த்த நாயகி அம்மனை வைப்பர். தாணுமாலயசாமி கையில் உள்ள திருமாங்கல்யம் வேத மந்திரங்கள் முழங்க, மணியோசை ஒலிக்க, பெண்கள் குலவையிட, பக்தர்கள் பக்திகோஷம் எழுப்ப அறம் வளர்த்த நாயகி கழுத்தில் கட்டப்படும்.

திருமணத்துக்கு சாட்சியாக கருட வாகனத்தில் திருமால் இருப்பார். திருக்கல்யாண விழா முடிந்தவுடன் பக்தர்களுக்கு சந்தனம், குங்குமம், வெற்றிலை, மஞ்சள் கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும். அதன்பின்னர், சுவாமியும் அம்மனும் பக்தர்களுக்கு காட்சிதர எழுதருளுவர். நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு இந்திரன் தேராகிய சப்பர தேரில் அறம்வளர்த்த நாயகி அம்மன், நான்கு ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.
Tags:    

Similar News