ஆன்மிகம்

உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் தேர் வெள்ளோட்டம்

Published On 2019-02-18 06:02 GMT   |   Update On 2019-02-18 06:02 GMT
திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் தேர் வெள்ளோட்டத்தில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற பஞ்சவர்ண சுவாமி கோவிலில் சிறிய வண்டி தேர் மட்டுமே இருந்து வந்தது. இதில் தான் தேரோட்டம் நடந்து வந்தது. இந்தநிலையில் கோவிலுக்கு பெரிய தேர் ரூ.15 லட்சம் செலவில் புதிதாக செய்யப்பட்டது. இந்த தேரின் வெள்ளோட்டம் நேற்று காலை நடந்தது. இதற்காக மலர்களால் தேர் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் சுவாமி, அம்பாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்பாள் கும்பங்கள் வைக்கப்பட்டன. காலை 9.30 மணி அளவில் தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தேர் உறையூர் பிரதான ரோடு, டாக்கர் ரோடு, குழுமணி ரோடு வழியாக கோவில் தெருவை சுற்றி வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் பகல் 11.35 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

தேரை பக்தர்கள் இழுக்கும் போது நமச்சிவாய... சிவ... சிவ... என பக்தி கோஷங்கள் முழங்கினர். தேர் நிலைக்கு வந்ததும் சிறப்பு பூஜை நடந்தது. மேலும் கும்பங்களுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தேர் சிறப்பாக நிலையை வந்தடைந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியில் கைதட்டி பக்தி கோஷம் எழுப்பினர். தேர் வெள்ளோட்டத்தையொட்டி திரளான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருண்பாண்டியன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர். 
Tags:    

Similar News