ஆன்மிகம்
திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறுவிழா கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.

நாகநாதர் கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு விழா தொடங்கியது

Published On 2018-12-01 04:09 GMT   |   Update On 2018-12-01 04:09 GMT
திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராகு தலம் நாகநாதர் கோவில் உள்ளது. இந்திரன், சூரியன் வழிபட்டு பேறு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கார்த்திகை கடைஞாயிறு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நேற்று காலை கொடி மரத்து சிறப்பு ஹோமம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளை கேவில் தலைமை அர்ச்சகர் நாகராஜகுருக்கள், அர்ச்சகர்கள் ஸ்ரீதரன், உமாபதி, சங்கர், சரவணன், செல்லப்பா ஆகியோர் நடத்தினர். பின்னர் பஞ்சமூர்த்திகள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகா தீபாராதனையும், 45 அடி உயர பிரமாண்ட மாலையும் அணிவிக்கப்பட்டு

கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வருகிற 6-ந் தேதி(வியாழக்கிழமை) திருக்கல்யாணம், 8-ந் தேதி(சனிக்கிழமை) தேரோட்டமும், 9-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) சூர்ய புஷ்கரணியில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரியும் நடக்கிறது. அன்று கோவில் குளத்தில் திரளான பக்தர்கள் புனித நீராடுகிறார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், மேலாளர் ராஜேந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர்.
Tags:    

Similar News