ஆன்மிகம்
கந்த சஷ்டி விழாவையொட்டி சண்முகசுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

சுவாமிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்

Published On 2018-11-14 05:18 GMT   |   Update On 2018-11-14 05:18 GMT
சுவாமிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடான தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் திகழ்கிறது. தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததால் சிவகுருநாதனாக சிறப்பு பெற்று இத்தலம் விளங்குகிறது.

பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலை இரு வேளையும் சாமி வீதி உலா நடைபெற்றது.

சுவாமிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றதையும், இதில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.


விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக காலை 11 மணிக்கு 108 சங்காபிஷேகமும், மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், 7 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சாமி புறப்பட்டு அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு சன்னதி தெரு மற்றும் தெற்கு வீதியில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு சண்முகசுவாமி புறப்பாடும், காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News