ஆன்மிகம்
தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி கணபதி ஹோமம் நடைபெற்ற போது எடுத்த படம்.

தஞ்சை பெரியகோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்

Published On 2018-07-13 04:10 GMT   |   Update On 2018-07-13 04:10 GMT
தஞ்சை பெரியகோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.
தஞ்சை பெரியகோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு இந்தியா மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், முருகன், விநாயகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் உள்ளன. இதில் வராகி அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆஷாட நவராத்திரி பெருவிழா 11 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா நேற்று தொடங்கியது.

கணபதிஹோமத்துடன் விழா தொடங்கியது. பின்னர் சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது. யாகம் முடிந்ததும் வராகி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மாலையில் வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் தினமும் காலையில் யாகமும், மாலையில் அம்மனுக்கு அலங்காரமும் நடைபெறுகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) 2-ம் நாள் அம்மனுக்கு மஞ்சள் அலங்காரமும், நாளை (சனிக்கிழமை) 3-வது நாள் குங்கும அலங்காரமும், 4-வது நாள் சந்தன அலங்காரமும், 5-வது நாள் தேங்காய்ப்பூ அலங்காரமும், 6-வது நாள் மாதுளை அலங்காரமும், 7-வது நாள் நவதானிய அலங்காரமும், 8-வது நாள் வெண்ணெய் அலங்காரமும், 9-வது நாள் கனிவகை அலங்காரமும், 10-வது நாள் காய்கறி அலங்காரமும், 11-வது நாள் புஷ்ப அலங்காரமும் நடைபெறுகிறது.

கடைசி நாள் அன்று மாலை அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, உதவி ஆணையர் பரணிதரன், கண்காணிப்பாளர்கள் தமிழ்ச்செல்வி, சுரேஷ், செயல் அலுவலர் மாதவன் மற்றும் ஆஷாட நவராத்திரி விழாக்குழுவினர் செய்திருந்தனர். 
Tags:    

Similar News