ஆன்மிகம்
ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜர், சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த காட்சி.

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருமஞ்சனம் - வருடாபிஷேக நிகழ்ச்சி

Published On 2018-06-21 08:47 IST   |   Update On 2018-06-21 08:47:00 IST
பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடந்த திருமஞ்சனம்-வருடாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில், ஆண்டு தோறும் ஆனி மாதம் சப்தமி உத்திர நட்சத்திர நாளில் ஆனி திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சனம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் நடராஜர் சன்னதியில் நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு 16 வகை அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் பெரியநாயகி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேவாரம் திருப்புகழ் பாடி சிறப்பு பூஜைகளும் நடந்தது. அதைத்தொடர்ந்து 16 வகை தீபாராதனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. காலை 6 மணிக்கு மேல் நடராஜர்-சிவகாமி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து 7 மணிக்கு சன்னதியில் நடராஜர், சிவகாமி அம்மன், விநாயகர், சண்டிகேஸ்வரர், மாணிக்கவாசகர், சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோருக்கு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில், உத்திர நட்சத்திர நாளில் பெரியநாயகி அம்மன் கோவிலில் வருடாபிஷேக நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் சோமஸ்கந்தர் சன்னதி முன்பு வருடாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி 3 கலசங்கள் வைத்து கலச பூஜையும், சிறப்பு யாகமும் நடந்தது. பின்னர் உச்சிகால பூஜையில் சோமஸ் கந்தர், வள்ளி-தெய்வானை, சிவன், பெரியநாயகி அம்மன் ஆகியோருக்கு 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கலச பூஜை, சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
Tags:    

Similar News