ஆன்மிகம்
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம். (உள்படம்: அலங்கரிக்கப்பட்ட கெங்கையம்மன்)

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2018-05-15 10:33 IST   |   Update On 2018-05-15 10:33:00 IST
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் திருவிழா கடந்த 30-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 11-ந் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நேற்று கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கோவிலில் கெங்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அதைத்தொடர்ந்து உற்சவர் கெங்கையம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

தேரோட்டம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவிலில் தொடங்கி தரணம்பேட்டை, நடுப்பேட்டை வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது.

தேரோட்டம் நடைபெற்ற வழிநெடுகிலும் பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றுடன் நாணயங்கள் கலந்து தேர் மீது தூவி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபட்டனர். மேலும் ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவில் தாசில்தார் பி.எஸ்.கோபி, நகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, பொறியாளர் சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, முன்னாள் நகரசபை தலைவர் எஸ்.அமுதா, கம்பன் கழக தலைவர் ஜெ.கே.என்.பழனி, முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் முருகன், திருமகள், மோகன், பாஸ்கரன், மூர்த்தி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி பல இடங்களில் பக்தர்கள் அன்னதானம், கூழ், மோர் வழங்கினர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) கெங்கையம்மன் சிரசு பெருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி அம்மன் சிரசு ஊர்வலம், கண் திறப்பு, வாணவேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 
Tags:    

Similar News