வழிபாடு

கொடியேற்ற நிகழ்ச்சி நடந்ததையும், குதிரை செய்ய மண் கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.

கச்சிராயிருப்பு கிராமத்தில் 18 ஆண்டுக்கு பிறகு குதிரை எடுப்பு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2023-03-25 06:55 GMT   |   Update On 2023-03-25 06:55 GMT
  • நன்கு விளைந்திருந்த 70 அடி உயர கொடிமரத்தை வெட்டி எடுத்தனர்.
  • புரவி எடுப்பு திருவிழா மே 30, 31 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.

சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கச்சிராயிருப்பு கிராமத்தில் வைகை ஆற்றின் கரையில் அய்யனார், ஊர்காவலன் சுவாமிகள்,கொடிப்புலி கருப்புசாமி ஆகிய கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது. அதன்பிறகு 18 ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு புரவி எடுப்பு திருவிழா நடைபெற இருக்கிறது.

இதையொட்டி நேற்று முன்தினம் கச்சிராயிருப்பு கிராம மக்கள் ஒன்று திரண்டு 15 கி.மீ. தொலைவில் உள்ள நாகமலை அடிவார பகுதிக்கு சென்று நன்கு விளைந்திருந்த 70 அடி உயர கொடிமரத்தை வெட்டி எடுத்தனர். பின்னர் அந்த கொடி மரத்தை 100-க்கும் மேற்பட்டோர் தலைசுமையாக சுமந்து கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் கிராம மந்தையில் பூஜைகள் செய்து நேற்று 70 அடி உயர மூங்கில் கம்பத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் கச்சிராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பிறகு இதைத்தொடர்ந்து குதிரை செய்யக்கூடிய மேலக்கால் வேளாளர் அவ்வைநாதன் மற்றும் வகையாறாவிடம் மண் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அவர்கள் அந்த மண்ணை கொண்டு குதிரைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள்.

அதன்பிறகு புரவிஎடுப்பு திருவிழா வருகிற மே மாதம் 30,31 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கச்சிராயிருப்பு கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.

Similar News