கோவில்கள்

மேலப்பெருவிளை புனித ஜெபமாலை மாதா ஆலயத்தின் வெளிப்புறத் தோற்றம்.

நூற்றாண்டுகளை கடந்த மேலப்பெருவிளை புனித ஜெபமாலை அன்னை ஆலயம்

Published On 2022-11-12 04:47 GMT   |   Update On 2022-11-12 04:47 GMT
  • இந்த பேராலயம் தான் கோட்டார் மறைமாவட்ட தலைமை பேராலயமாகவும் விளங்குகிறது.
  • 1941-ம் ஆண்டு ஆலயத்தின் கோபுரம் கற்களால் கட்டி எழுப்பப்பட்டது.

கத்தோலிக்க திருச்சபையின் சிறப்புமிகுந்த மறைமாவட்டங்களில் குமரி மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள கோட்டார் மறைமாவட்டமும் ஒன்றாகும். கீழ்த்திசை நாடுகளின் திருத்தூதர், இரண்டாம் பவுல், கேட்டவரம் தருபவர் என்று கிறிஸ்தவர்களால் போற்றி புகழப்படும் புனித சவேரியார் நற்செய்தி அறிவித்து, மக்களுக்கு தொண்டாற்றிய பங்குகளில் கோட்டார் பங்கு முக்கிய இடம் வகிக்கிறது. புனித சவேரியாருக்கு எழுப்பப்பட்ட முதல் ஆலயம் என்ற பெருமையை கோட்டார் புனித சவேரியார் பேராலயம் வகிக்கிறது. இந்த பேராலயம் தான் கோட்டார் மறைமாவட்ட தலைமை பேராலயமாகவும் விளங்குகிறது.

தேவசகாயத்துடன் தொடர்புடைய பங்கு

இந்த கோட்டார் மறைமாவட்டத்தின் பங்குகளில் ஒன்றாக நாகர்கோவில் மாநகரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள மேலப்பெருவிளை பங்கு உள்ளது. இந்த பங்கு, கோட்டார் மறைமாவட்டம் உருவாவதற்கு, (அதாவது 1930-க்கு) முன்பே இருந்த பழமையும், பாரம்பரியமும் கொண்ட பங்குகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது திருவிதாங்கூர்- கொச்சி சமஸ்தானமாக இருந்தபோது கோவா மறைமாவட்டத்தில் இருந்து கி.பி.1886-ம் ஆண்டில் கொல்லம் மறை மாவட்டம் உருவானது. அப்போது இன்றைய குமரி மாவட்டத்தில் இருந்த 14 பங்குகளில் மேலப்பெருவிைள பங்கும் ஒன்று என்ற பெருமையைக் கொண்டது. இயேசுவின் நற்செய்தியால் ஈர்க்கப்பட்டு, மறைசாட்சியாக இந்திய மண்ணில் ரத்தம் சிந்திய முதல் இல்லற புனிதர் என்ற பெருமையைப் பெற்ற புனித தேவசகாயத்துடன் தொடர்புடைய பங்கு இந்த மேலப்பெருவிளை பங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலில் அரை சென்ட் மனையில் சிலுவை பாணியில் பனை ஓலையினால் ஒரு குருசடியை இப்பகுதி மக்கள் உருவாக்கி இயேசுவை வழிபட்டு வந்தனர். 5 முன்னோடி குடும்பங்கள் இணைந்து இந்த குருசடியில் வழிபாடுகள் நடத்தி வந்தனர். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பதை உணர்ந்த இப்பகுதியின் முன்னோர்கள் குருசடி இருந்த இடத்தில் கி.பி.1832-ம் ஆண்டில் புனித செபமாலை அன்னைக்கு மண்சுவராலும், ஓட்டுப்புரையாலும் ஆலயம் ஒன்றை உருவாக்க நினைத்தனர். அதற்கு வடசேரி, அறுகுவிளை, புதுக்குடியிருப்பு, சாந்தான் செட்டிவிளை ஊர்க்காரர்களும், மேலப்பெருவிளை ஊர்க்காரர்களும் இணைந்து ஆலயம் எழுப்பினர்

வேண்டுதல் நிறைவேற்றும் அன்னை

1941-ம் ஆண்டு ஆலயத்தின் கோபுரம் கற்களால் கட்டி எழுப்பப்பட்டது. 1942-ம் ஆண்டு தொடங்கி 1944-ம் ஆண்டுகளில் கோவில் உட்புறப் பலிபீடம் புதுப்பிக்கப்பட்டது. இன்றும் இந்த ஆலயம் கல் கட்டிடமாகவும், ஓடுகளால் ஆன மேற்கூைரயுடனும் பழமை மாறாமல் காட்சி அளிக்கிறது. கி.பி.1858-ம் ஆண்டில் இந்தியாவில் பரவிய காலரா, வைசூரி போன்ற கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு கூட்டம் கூட்டமாக மக்கள் மடிந்தனர். இந்தியாவின் தென்கோடியான குமரி மண்ணையும் இந்நோயின் தாக்கம் விட்டு வைக்கவில்லை. அந்த சமயத்தில் மேலப்பெருவிளை மக்கள் இந்த நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சலேத் அன்னையை நோக்கி இடைவிடாது வேண்டினர். புனித லூக்காவின் நற்செய்தி வாசகத்திற்கேற்ப மாதா, மக்களுக்கு அருள்பாலித்து, ஒரு கெபியை கட்ட பணித்தார். அதன்படி மக்கள் கற்களை தலைமேல் சுமந்து வந்து கெபியைக் கட்டினர்.

அதில் 1867-ம் ஆண்டு புனித சலேத் அன்னை சொரூபத்தை அன்றைய கொல்லம் ஆயர் எப்ரேம் ஸ்தாபித்தார். ஊர் மக்களைத் தாக்கி வந்த கொள்ளை நோய்களும் அன்னையின் அருளால் முற்றிலும் அகன்றது. அன்று முதல் இன்று வரை அன்னையிடம் மனம் உருகி வேண்டுபவர்களின் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறுகிறது என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.

புதுமைகள் நிகழ்கிறது

சலேத் மாதாவின் எழில்மிகு தோற்றத்துடன் கூடிய இந்த கெபியானது 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 -ந் தேதி அன்றிருந்த பங்கு பணியாளர்களின் இடையறாத உழைப்பாலும் பங்கு மக்களின் வீடுகள் தோறும் சென்று நன்கொடைகள் பிரித்தும் புதிதாகக் கட்டப்பட்டது. அன்றைய ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் கெபியை அர்ச்சித்து வைத்தார். சலேத் அன்னை 1864-ம் ஆண்டு சலேத் மலையில் காட்சி கொடுத்ததை கொண்டாடும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 19 -ந் தேதி ஆடம்பர விழாவாக தற்போதைய பங்குத்தந்தை குருசு கார்மல் முயற்சியால் கொண்டாடப்பட்டது. அத்தோடு புதுமைகள் பல நிகழும் அன்னையின் கெபியில், மாதந்தோறும் 19-ந் தேதி அன்று காலை 11 மணிக்கு சிறப்பு திருப்பலியும், தொடர்ந்து கஞ்சிதர்மமும் நடைபெற்று வருகிறது. தற்போதைய பங்குத்தந்தை குருசு கார்மல் ஊர் மக்களுடன் இணைந்து, நன்கொடை சேகரித்து கெபியில் மேற்கூரை அமைத்து தந்துள்ளார்.

மேலப்பெருவிளை 1989-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந் தேதி முதல் தனிப்பங்காக உதயமானது. 1990-ம் ஆண்டு இந்த பங்கு பணியாளருக்கு இல்லம் அமைக்கப்பட்டது. அதுமுதல் பங்குத்தந்தை அங்கு தங்கி பணியாற்றி வருகிறார். 1962-ம் ஆண்டு இந்த ஊரில் ஒரு ரேடியோ நிலையம் கட்டப்பட்டது. அதனை பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக அங்கம் வகித்த லூர்தம்மாள் சைமன் திறந்து வைத்துள்ளார். 1963-ம் ஆண்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், 1966-ல் படிப்பகமும், 1968-ல் கோட்டார் சமூகசேவை மையத்தால் ஏற்படுத்தப்பட்ட கிராம மருந்தகமும் உருவானது. 1965-ம் ஆண்டில் ஊர் மக்களின் நீராதாரத் தேவையை பூர்த்தி செய்ய கோவில் நிலத்தில் கிணறு வெட்டி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. 2003-ம் ஆண்டு புனித ஜெபமாலை அன்னை சமுதாய நலக்கூடம் பங்கு மக்களின் உதவியோடு அடிக்கல் நாட்டப்பட்டு 2004-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

புனித தேவசகாயம்

2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதி இந்த பங்கில் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற குருசு கார்மல், புனித சலேத் அன்னை கெபியில் புதுமை பொருட்கள் விற்பனை நிலையத்தையும், நிர்வாகிகள் அலுவலகத்தையும் கட்ட முயற்சி எடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டி முடித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் புனித தேவசகாயத்துக்கென்று வெள்ளிக்கிழமை நவநாள் திருப்பலியும் நிறைவேற்றப்படுகிறது. அதற்கென்று திருச்சூரிலிருந்து புனித தேவசகாயம் சொரூபம் ஒன்றை தனது சொந்த முயற்சியில் வாங்கி அதை சலேத் அன்னை கெபியில் வைத்து ஸ்தாபித்து பவனியாக ஆலயத்திற்கு கொண்டுவந்த பெருமையும் பங்குத்தந்தை குரூஸ் கார்மலையே சாரும்.

மகிமை பெருகுகிறது

மேலும் இந்த ஆலயம் தொடர்பாக மேலப்பெருவிளை பங்குத்தந்தை குருசு கார்மல் கூறியதாவது:-

கோட்டார் மறை மாவட்டத்திற்கு உட்பட்ட பங்குகளில் மேலப்பெருவிளை பங்கும் ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள ஜெபமாலை மாதா ஆலயத்தில் ஜெபமாலை அன்னையும், சலேத் அன்னையும் பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள். இதனை ஆலயத்துக்கு நன்றி செலுத்த வரும் பக்தர்களின் மூலமாக காண முடிகிறது. அதனால் அன்னையின் மகிமை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

இந்த ஆலயத்தில் வார நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு ஜெபமாலையும், தொடர்ந்து திருப்பலியும், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு திருப்பலி, 7.30 மணிக்கு மறைக்கல்வி குழந்தைகளுக்கான திருப்பலியும் நடைபெறுகின்றன. ஞாயிறுதோறும் காலை 8.45 மணி முதல் 9.45 மணி வரை மறைக்கல்வியும், தொடர்ந்து 10.30 மணி முதல் அனைத்து சிறார் இயக்கங்களும் செயல்படுகின்றன. மாதத்தில் ஒருநாள் மறைக்கல்வி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டு வருகிறது.

உறுதிமொழி

இதுதவிர கடந்த ஆண்டு முதல் மாதத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சிறுவர்களுக்கான ஆங்கில திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் முதல் மறைக்கல்வி மாணவர்களுக்கென்று ஞாயிறு காலை 7.30 மணிக்கு திருப்பலி நிறைவேற்றி அதில் மறைக்கல்வி மாணவர்களே, இசைமீட்டி பாடலும் பாட முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் அக்ேடாபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி 2-வது ஞாயிற்றுக்கிழமை முடிவடையும்.

இங்கு ஏற்கனவே மறைக்கல்வி, பாலர் சபை, சிறுவழி இயக்கம், இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம், இளைஞர் இயக்கம், மரியாயின் சேனை, வின்சென்ட் தே பவுல் சபை மற்றும் கிராம பெண்கள் சங்கம் ஆகியன செயல்பட்டு வந்தன. நான் இங்கு பொறுப்பேற்ற பிறகு நற்செய்தி பணிக்குழு, குடும்பநலப் பணிக்குழு, கைகள் தன்னம்பிக்கை இயக்கம், பிரான்சிஸ்கள் மூன்றாம் சபை, திருஇருதயநாதர் சபை, வழிபாட்டுக் குழு, கத்தோலிக்க சேவா சங்கம், பெண்கள் பணிக்குழு, கார்மல் சபை என பல சபைகள் உருவாக்கப்பட்டுள்ளது. பங்கு மக்களும் துடிப்போடு செயல்பட்டு வருகிறார்கள்.

இறையருளில் பிறந்து, பங்குதந்தையர் பணியில் வளர்ந்து, இணை தந்தையர்கள் உழைப்பில் உயர்ந்து முழுமை பெற்ற இந்த ஊர் சலேத்அன்னையின் அடிச்சுவட்டில் ஊரின் நலனிலும், வளர்ச்சியிலும் அக்கறை காட்டுகிற சமூகமாக மாற்றுவோம் என உறுதிமொழி ஏற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News