கோவில்கள்

யாக சாலையில் சிறப்பு யாகம் நடந்த போது எடுத்த படம்.

கூடலழகர் பெருமாள் கோவிலில் இன்று பாலாலயம்: ஆவணி மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு

Published On 2023-06-29 06:13 GMT   |   Update On 2023-06-29 06:13 GMT
  • இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2006-ம் ஆண்டு நடந்தது.
  • சுமார் ரூ.1 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மதுரை நகரில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்தப்படியாக மிகவும் பழமை வாய்ந்தது கூடலழகர் பெருமாள் கோவில். சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2006-ம் ஆண்டு நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆனது குறித்து அரசுக்கு கோவில் நிர்வாகம் தெரிவித்தது. அதை தொடர்ந்து தற்போது பதவி ஏற்றுள்ள தி.மு.க. அரசு மதுரையில் முதன் முதலாக கூடலழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவு வெளியிட்டது. அதன்படி சுமார் ரூ.1 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் அனைத்தும் டி.வி.எஸ்.நிறுவனம் ஏற்று கொண்டதாக கூறப்படுகிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி முதலில் கோவிலில் உள்ள கோபுரங்களுக்கு பாலாலய பூஜை கடந்த ஆண்டு நடந்தது. அதில் ராஜகோபுர பணிகளை மட்டும் மீனாட்சி அம்மன் கோவில் முன்னாள் தக்கார் கருமுத்து கண்ணன் செய்து தருவதாக தெரிவித்து இருந்தார். அதை தொடர்ந்து ராஜகோபுரம், விமானம், மேல் தளம் உள்ளிட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது. அந்த பணிகள் தற்போது முடிந்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக கோவிலில் உள்ள சுமார் 19 உபசன்னதிகளில் உள்ள 40 சுவாமிகளுக்கு பாலாலயம் நடத்த முடிவு செய்தது.

அதற்காக கோவிலின் தெற்கு பிரகாரத்தில் 14 நவ குண்டம் அமைக்கப்பட்டு யாக சாலை பூஜைகள் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. 4 கால பூஜைகள் இன்று (வியாழக்கிழமை) முடிந்த உடன் காலை 7.45 மணி முதல் 8.45 மணிக்குள் பாலாலயம் நடைபெறும். 19 சன்னதிகளில் வேலைகளை செய்வதற்காக அதில் உள்ள சுவாமியின் சக்தியை யாகசாலையில் பூஜையில் வைக்கப்பட்டுள்ள மரப்பலகையில் உள்ள சுவாமியின் மீது அந்த சக்தி இறக்கப்படும். அதன்பின்னர் அந்த பகுதியில் திருப்பணி வேலைகள் தொடங்கும்.

எனவே கோவிலில் மூலவரை தவிர மற்ற சன்னதிகள் அனைத்தும் சாத்தப்பட்டு இருக்கும். இந்த பணிகள் விரைவில் முடிவடையும் பட்சத்தில் வருகிற ஆவணி மாதம் கோவிலில் கும்பாபிஷேகத்தை நடத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்காக கோவிலில் அனைத்து பகுதிகளிலும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News