கோவில்கள்
அருள்மிகு அழகிரிநாதர் கோவில் என்கிற கோட்டைப்பெருமாள் திருக்கோவில்

அருள்மிகு அழகிரிநாதர் கோவில் என்கிற கோட்டைப்பெருமாள் திருக்கோவில்

Published On 2022-05-18 01:32 GMT   |   Update On 2022-05-18 01:32 GMT
சேலத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அழகிரிநாதர் கோவில், “கோட்டைப்பெருமாள் திருக்கோவில்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சேலம் மாநகரின் மையப்பகுதியில்அமைந்துள்ள 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அழகிரிநாதர் கோயில், வரலாற்று சிறப்பு மிக்க வைணவத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சிறப்பு பெற்ற கோயில்கள் அனைத்தும் ஆகமவிதிகளின் படி, கரைபுரண்டு ஓடும் ஆறுகளின் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கும். அதற்கு ஏற்ப கோட்டை அழகிரிநாதர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பண்டைக் காலத்தில் திருமாலின் அவதாரமான அழகிரிநாதர் கோயிலுக்கு முன்பு, திருமணிமுத்தாறு கரைபுரண்டு ஓடியது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், இதன் சிற்பக்கலைக்காக பெரிதும் அறியப்படுகிறது. இக்கோயில், அழகிரி பெருமாள் மற்றும் மாரியம்மனுக்காக கட்டப்பட்ட கோயில்கள் சூழ அமைந்துள்ளது.

திருமணி முத்தாற்றில் நீராடி திருமாலை தினம் துதித்தால் துயரங்கள் அனைத்தும் தூரவிலகி ஓடும் என்பது ஐதீகம் என்கின்றனர் பட்டாச்சாரியார்கள். அதியர்கள் காலத்தில் சமஸ்கிருத மொழி ெகாங்கு மண்டலத்தில் கோலோச்சியது.சௌந்திரராஜன் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு அழகுராஜன் என்று தமிழில் பொருள். மலைசூழ் நகரமான சேலத்தில் அருள்பாலித்த இறைவன் சௌந்திரராஜன் தான், பிற்காலத்தில் தமிழாக்கத்தில் அழகிரிநாதர் என்று அழைக்கப்பட்டார்.

அழகிரிநாதருக்கு பின்புறத்தில் சுந்தரவல்லி தாயார் சன்னதி உள்ளது. கோயிலின் தென்மேற்கு மூலையில் சோழர்களை வீழ்த்திய மதுரைமன்னர் சுந்தரபாண்டியன் வெற்றி குறித்த கல்வெட்டு உள்ளது. அதியர், சேர, சோழ, பாண்டியர் காலங்களில் கோயில் சீரமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் வரலாற்று காலத்தில் இருந்து, உருவத்தில் மூன்றாவது இடம் வகிக்கிறார்.

உருவத்தில் பெரியவரான நாமக்கல் ஆஞ்சநேயர் முதலாவதாகவும், இரண்டாவதாக கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சநேயரும், மூன்றாவதாக சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயில் ஆஞ்சநேயரும் குறிப்பிடப்படுகின்றனர். இக்கோயிலில் மூலவர் அழகிரி நாதர், பக்கத்தில் தாயார் ஸ்ரீதேவி, பூதேவி உள்ளனர். இதைதவிர மூலவரை சுற்றி சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆஞ்சநேயர், வேணுகோபாலசுவாமி சன்னதிகள் உள்ளன. வைகாசி மாதத்தில் இங்கு நடக்கும் திருத்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.

தேரோட்டத்தின்போது சேலம் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து செல்வார்கள். ஐப்பசியில் பவித்ர உற்சவமும், மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவும், பங்குனி மாதத்தில் ஸ்ரீராமநவமி உற்சவமும் இங்கு களைகட்டும். இதைதவிர புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளிலும் மூலவர் அழகிரி நாதர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கின்றனர். பக்தர்கள் லட்டு உள்பட பல வகையான பிரசாதங்களை வழங்கி வருகின்றனர்.

இதைதவிர முக்கிய திருவிழா நாட்களில் உற்சவர் சுந்தரராஜர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இத்திருத்தலம் கோட்டை அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமணம் நடைபெற்ற கோயிலாகும். இங்குள்ள அழகிரிநாதர் திருமண கோலத்தில் காட்சியளிப்பதால் திருமணமாகாத ஆண், பெண் கோட்டை அழகிரிநாதரை மனமுருகி வேண்டிக் கொண்டால் திருமண தடை விலகும். குழந்தை பேறு, நோய், நொடி இல்லாமல் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழலாம் என்பது ஆண்டாண்டு காலமாய் அழகிரிநாதரை வழிபடும் பக்தகோடிகளின் நம்பிக்கை.

பல்வேறு திருவிழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. அவைகளில் முக்கியமானது, வைகுண்ட ஏகாதசி திருவிழாவாகும். இச்சமயத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வழிபாடு செய்வதற்கு அலை மோதுகின்றனர். பிரமோத்ஸவம், நவராத்திரி, பவித்ரோத்ஸவம, புரட்டாசி மற்றும் ஆண்டாள் திருக்கல்யாணம் ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

ஆண்டாள் திருக்கல்யாணத்தின் போது திருவில்லிப்புத்தூரிலிருந்து, பிரத்யேகமாக தொடுக்கப்பட்ட பூமாலை தருவிக்கப்பட்டு, ஆண்டாள் அம்மைக்கு சூட்டப்படுகிறது. இவ்விழாக்காலங்களில், சேலம் நகருக்கு அருகில் உள்ள ஊர்களிலிருந்து பக்தகோடிகள், இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

சேலத்தில் உள்ள வைணவ கோயில்களுக்கு எல்லாம் தலைமையாக கருதப்படுவது கோட்டை அழகிரிநாதர் கோயில். இக்கோயிலை சுற்றி செவ்வாய்பேட்டையில் பாண்டு ரங்கநாதர் கோயில், பிரசன்னா வெங்கட்ரமணா சுவாமி கோயில், ஆனந்தா இறக்கத்தில் லட்சுமிநாராயண சுவாமி கோயில், பட்டைகோயிலில் வரதராஜ பெருமாள் சுவாமி கோயில், சின்னதிருப்பதியில் வரதராஜபெருமாள் கோயில், கடைவீதியில் வேணுகோபாலசுவாமி கோயில், சிங்கமெத்தையில் சௌந்திரராஜ பெருமாள் கோயில், நாமமலையில் சீனிவாச பெருமாள் கோயில், உடையாப்பட்டியில் சென்றாய பெருமாள் கோயில் என்று திரும்பிய திசையெல்லாம் கோயில்கள் இருப்பது வேறு இங்கும் இல்லாத சிறப்பு.
Tags:    

Similar News