கோவில்கள்
அக்னீசுவர சுவாமி திருக்கோவில் கஞ்சனூர்

அக்னீசுவர சுவாமி திருக்கோவில் கஞ்சனூர்

Published On 2022-01-03 06:09 GMT   |   Update On 2022-01-03 06:09 GMT
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே கும்பகோணத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில்.
சுவாமி: அக்னீசுவரர்
அம்பாள்: கற்பகாம்பாள்
மூர்த்தி: அக்னீசுவரர்
தீர்த்தம்: அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம்.
தலவிருட்சம்: பலாசம்.
தலச்சிறப்பு: இத்தலம் நவக்கிரக தலங்களில் சுக்கி ரன் தலமாக விளங்குகிறது.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே கும்பகோணத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில். தேவாரம், பெரிய புராணம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 36-வது ஸ்தலமாகும். இந்த கோவில் மதுரை ஆதீனத்திற்கு உட்பட்டதாக திகழ்கிறது. இது நவக்கிரக ஸ்தலங்களில் சுக்கிரனுடைய ஸ்தலமாக போற்றப்படுகிறது.

மூலவராக அக்னீஸ்வரரும், தாயாராக கற்பகாம்பிகையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். தல விருட்சமாக புரசமரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் உள்ளது.

சிவபெருமான் பராசர முனிவருக்கு முக்தி தாண்டவம் ஆடி நீங்கியருளியத் தலம் பிரம்மனுக்கு திருமண காட்சி தந்தத்தலம், அக்னிக்கு உண்டான சோகை நோயை தீர்த்த தலம், சந்திரனின் சாபம் நீங்கியத் தலமாகவும் உள்ளது.

அது மட்டுமின்றி கம்சன் என்னும் மன்னனின் உடற்பிணி நீக்கிய தலம், கலிக்காமருக்கு திருமணம் நடந்தத் தலம், மானக்கஞ்சாரர் அவதரித்து வழிபட்டத் தலம். மேலும் பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்தர் அவதார தலம், வடக்கு நோக்கி ஓடும் காவிரிக் கரையில் அமைந்த தலம் என பல புராண வர லாறுகளை தன்னகத்தே கொண்டது.

இத்தலம் நம்மை நாளும் ஆளும் நவக்கிரகங்களில் ஒன்றான சுக்ரனுக்குரிய பரிகாரத் தலமாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற திருக்கஞ்சனூரில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள தல மூலவரான அக்னீஸ்வர சுவாமி கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயர்ந்த பாணத்துடன் சுக்ர பகவானாக லிங்க வடிவத்தில் அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம்.

பிரம்ம தேவருக்கு திருமணக்கோலம் காட்டி அருளியதால், இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் தனி சன்னதியில் அன்னை கற்பகாம்பாள் காட்சி அளிக்கிறார்.

தல வரலாறு

முன்னொரு காலத்தில் கஞ்சனூரில் சுக்கிரன் ஸ்தலத்தில் வைணவரான வாசுதேவருக்கு ஓர் குழந்தை பிறந்தது. அவர் நாராயணனே தனக்கு குழந்தையாக பிறந்ததாக கருதி குழந்தைக்கு சுதர்சனர் என பெயரிட்டனர்.

வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. சிறு வயதிலேயே சிவனின் மேல் ஈடுபாடு கொண்டு சிவ பக்தர்களோடே இருந்தது. வீட்டில் தாய் இட்ட நாமத்தையும் சூரனத்தையும் அழித்து விபூதி ருத்ராட்சம் அணிவதையே விரும்பியது. எப்போதும் சிவன் கோவிலிலேயே இருந்தது. விளையாடும் இடமே சிவன் கோவில் என தினமும் கோவிலிலேயே விளையாடியது.

சுதர்சனிடம் அவரது தந்தை எவ்வளவோ எடுத்து கூறியும் விபூதியும் ருத்ராட்சமுமே பிடித்ததாய் இருந்தது. பூணூல் கல்யாணம் செய்வித்து நாம் வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீமகா விஷ்ணு. நாமத்தையும் சூரனத்தையும் இடவேண்டும் என கறாராக சுதர்சனனின் தந்தை சொல்லியும் கேட்கவில்லை. மாலை நேரத்தில் வீடு திரும்பிய மகனை தூணில் கட்டி வைத்து அடித்தார், பயன் இல்லை. மாறாக சிவன் கோவிலுக்கே போனார்.

தன் பேச்சை கேட்காத வரை இனி வீட்டில் இடமில்லை, உணவளிக்க கூடாதென்று சொல்லி வீட்டை விட்டு குழந்தையான சுதர்சனரை வெளியே அனுப்புகிறார். நேராக அக்னீஸ்வரர் ஆலயம் சென்று, அக்னீஸ்வரரையும், கற்பகாம்பிகையையும் வலம் வந்து துதித்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு எதிரே தியானத்தில் அமர்ந்தான் சுதர்சன்.

சிவபெருமானை துதித்தான். தன் மீது கருணை காட்டி அருள்புரிய வேண்டினான். இறுதியில் சோர்ந்து விழுந்து விட்டான். பார்வதி தேவியுடன் ரிஷபாரூடராய் சிவபெருமான் காட்சியளித்தார்

சிவபெருமான் சுதர்சனரிடம் “அப்பா, உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்று சொன்னார். குழந்தையும் பகவானுடைய திருவடிகளை விட்டு பிரியாத வரம் கேட்டான். சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் அருளினார் பெருமான். அவனுக்கு எல்லா கலைகளும் வருமாறு வரமருளினார்.

பின்னர் அவனை கருணையினால் நோக்கி, நீ உனது உடல் பொருள், ஆவி மூன்றையும் ஹரனாகிய எனக்குத் தத்தம் செய்து விட்டபடியால் உனக்கு ஹரதத்தன் என்ற தீட்சா நாமம் தந்தோம். உனக்கு எல்லாக் கலைகளையும் யாமே உபதேசிப்போம் என்று அருளினார்.

தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து, குழந்தைக்குத் தனது மலர்க்கையால் விபூதியிட்டு, ருத்ராட்ச மாலையணி வித்து பஞ்சாட்சர உபதேசம் செய்து, ஸ்படிக லிங்கம் கொடுத்து (ஹரதத்தர் பூஜித்த சிவ லிங்கம் தனியாக கஞ் சனூரிலே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது) சிவ பூஜா வித்யையும் தாமே உபதேசித்தார். வீட்டிற்கு நள்ளிரவில் சுதர்சன் திரும்பினார். தன் தாயிடம் நடந்ததை சொன்னார். அவரது தந்தை வீட்டுக்குள் விடமுடியாது என்றார். தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் முற்றியது, பொழுதும் விடிந்தது.

அந்த ஊரில் இருந்த வைணவர்கள் ஒன்று கூடி, இதனை நாங்கள் ஏற்கமாட்டோம். இவ்வூரிலுள்ள வரதராஜப்பெருமாள் கோவிலில் அக்னி வளர்த்து அதற்கு மேல் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்தபடி இவன், சிவனே பரம்பொருள் என்று நிரூபிக்க வேண்டும். முடியாது போனால் தீக்கு இரையாக வேண்டும் என்றார்கள்.

ஹரதத்தரும் அக்னீசுவரரை வழிபட்டு பெருமாள் கோவிலுக்குச் சென்று தீக்குழியின் மீது அமைக்கப்பட்ட காய்ச்சிய முக்காலியில் அமர்ந்து, வேத புராணங்கள் சிவனே பரம்பொருள் என்று கூறியுள்ளபடியால் இந்த முக்காலி அடியேனுக்குக் குளிரட்டும் என்று கூறி, சிவபரத்துவ சுலோகங்களையும், இருபத்திரண்டு நிரூபணங்கள் அடங்கிய பஞ்ச ரத்ன சுலோகங்களையும் கூறி அருளியவுடன் முக்காலி குளிர்ந்தது. தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அனைவரும் ஹரதத்தரிடம் தம்மை மன்னிக்க வேண்டினர்.

ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர். இக்க பட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர்ப் பெருமாள் கோயிலிலும் உள்ளது. பெருமாள் கோவிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர். நவகிரகங்களில் முக்கிய சுபகிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார்.

கோவில் நடை திறப்பு நேரம்

நடைதிறப்பு: காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில் முகவரி

அருள்மிகு அக்னீசுவர சுவாமி திருக்கோவில்,
கஞ்சனூர் அஞ்சல்,
திருவிடை மருதூர் வட்டம்,
தஞ்சை மாவட்டம், 609 804.

Tags:    

Similar News