கோவில்கள்
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில்

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில்

Published On 2021-12-30 08:48 GMT   |   Update On 2021-12-30 08:48 GMT
ஒரு காலத்தில் இந்த பஞ்சவடியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்தனர். இதன் அடிப்படையில் இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட முடிவானது.
தல வரலாறு:

ஒரு காலத்தில் இந்த பஞ்சவடியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்தனர். பல ரிஷிகள் வேத சாஸ்திரங்களை பலருக்கும் உபதேசம் செய்தனர். இதன் அடிப்படையில் இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட முடிவானது. ஆஞ்சநேயர் மாபெரும் சக்தி படைத்தவர் என்பதால், மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகிலுள்ள சிறுதாமூரில் கிடைத்த 150 டன் எடை கருங்கல்லைக் கொண்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உருவாக்கப்பட்டது.

பஞ்சமுகத்திற்கான காரணம்:

ராமனுக்கும், ராவணனுக்கும் போர் நடந்த போது, ராவணன் ஆயுதங்களை இழந்தான். இதனால் அவனை மறுநாள் வரும்படி அனுப்பி விட்டார். ராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்கு என்பதை ராவணன் உணரவில்லை. மீண்டும் ராமருடன் போர் செய்ய நினைத்த ராவணன், "மயில் ராவணன்' என்ற மற்றொரு அசுரனின் துணையுடன் போருக்கு வந்தான். ராமரை அழிக்க மயில் ராவணன் கொடிய யாகம் நடத்த திட்டமிட்டான்.

இந்த யாகம் நடந்தால் ராம-லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று விபீஷணன் ராமரிடம் தெரிவித்தான். அவனை அழிக்க ஆஞ்சநேயரை அனுப்பினார் ராமன். நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்ற ஆஞ்சநேயருக்கு, அந்த தெய்வங்கள் தங்களின் சக்தியை அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை அழித்தார்.

தல சிறப்பு:

ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் செயல்களில் வெற்றி, லட்சுமி கடாட்சம், ஹயக்கிரீவரின் அருளால் அறிவாற்றல், ஆன்மிக பலம், வராகரின் அருளால் மனத்துணிவு, கருடனின் அருளால் நஞ்சு ஆபத்து விலகும் தன்மை, ஆஞ்சநேயர் அருளால் மன அமைதி, சகல சவுபாக்கியம் கிடைக்கும்.

கோவில் அமைப்பு:

12 ஏக்கர் நிலப்பரப்பில் தெற்கு பார்த்து கோவில் அமைந்துள்ளது. ராமர், சீதை, லட்சுமணன், சத்ருக்கன், பரதன் ஆகியோர் ஒரு சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் ஆஞ்சநேயருக்கு மேல் 118 அடி உயர விமானமும், அதன் மீது 5 அடி உயர கலசமும் அமைக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு அபிஷேகம் செய்ய லிப்ட் இருக்கிறது.

இதற்கு 1008 லிட்டர் பால் தேவைப்படும். இங்குள்ள 1200 கிலோ எடையுள்ள மணியை ஒலித்தால் 8 கி.மீ. தூரம் ஒலி கேட்கும்.பெரிய தீர்த்த கிணறும் உள்ளது. இங்கு ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சந்தன மரத்தால் செய்யப்பட்டது. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

மிதக்கும் கல்:

சீதையை மீட்பதற்காக ராமர், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சென்றபோது, சேது சமுத்திரத்தில் பாலம் அமைக்கப்பட்டது. நளன், நீலன் என்ற வானர வீரர்கள் இந்த பாலப்பணியை நடத்தினர். நளன் தேவசிற்பியான விஸ்வகர்மாவின் மகன். விஸ்வகர்மா தன் மனைவிக்கு, "என்னைப்போலவே உனக்கொரு மகன் பிறப்பான். எனக்குரிய திறமை அனைத்தும் அவனிடமும் இருக்கும்,''என வரம் கொடுத்தார்.

இதனால் நளன் தன் தந்தையைப்போல் சிற்ப பணியில் சிறந்து விளங்கினான். இவனால் கடலிலும் பாலம் கட்ட முடிந்தது. இந்த மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோவிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள்.
Tags:    

Similar News