கோவில்கள்
ஐயப்பனின் அறுபடை வீடுகள்

ஐயப்பனின் அறுபடை வீடுகள்

Published On 2021-12-08 11:36 IST   |   Update On 2021-12-08 11:36:00 IST
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போல், ஐயப்பனுக்கும் 6 கோவில்கள் உள்ளன. அவற்றை ஐயப்பனின் அறுபடை வீடுகள் என்றே சொல்லலாம்.
சபரிமலை :

இங்கு தர்மசாஸ்தாவான ஐயப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார்.

எருமேலி :

இங்கு ஐயப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார்.

ஆரியங்காவு :

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், கேரளா மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக காட்சி தருகிறார் ஐயப்பன்.

அச்சன்கோவில் :

செங்கோட்டையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சித் தருகிறார் ஐயப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பன் கல்யாண சாஸ்தா என்று அழைக்கிறார்கள். இதனால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

பந்தளம் :

இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகரப் பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு தான் சுவாமி ஐயப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் உள்ளன.

குளத்துப்புழா:

செங்கோட்டையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலை வில் கேரளாவில் அமைந்துள்ளது இது. இங்கு ஐயப்பன் குழந்தையாக இருப்பதால் பால சாஸ்தா என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இக்கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது. சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர் கள், ஐயப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Similar News