ஆன்மிகம்
ஆயிரம் தூண்களுடன் அழகாக காட்சி தரும் ஜெயின் கோவில்

ஆயிரம் தூண்களுடன் அழகாக காட்சி தரும் ஜெயின் கோவில்

Published On 2021-06-28 07:51 GMT   |   Update On 2021-06-28 07:51 GMT
3 மாடிகளை கொண்ட இந்த கோவிலின் நுழைவுவாயில் பகுதியில் ஒரே கல்லால் ஆன 16 அடி உயர தூண் உள்ளது. அது ‘மகாஸ்தம்பம்’ என்று அழைக்கப்படுகிறது.
தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஓங்கி உயர்ந்த மலைகளுக்கு மத்தியில் எழிலுற அமைந்து உள்ளது மூடபித்ரி. இதற்கு ‘கிழக்கு மூங்கில் பகுதி’ என்று பொருள். இது 14 முதல் 16-ம் நூற்றாண்டு வரை ஜெயின் மதம், கலாசாரம், கலை, கட்டிடக்கலை ஆகியவற்றை பறைசாற்றுவதாக இருந்தது. இங்கு 18 பிரசித்தி பெற்ற ஜெயின் கோவில்கள் உள்ளன.

நாடு முழு வதும் இருந்து ஜைன மதத்தினர் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள். தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் ஏராளமான ஜெயின் கோவில்கள் இருந்த போதிலும் மூடபித்ரியில் உள்ள ஜெயின் கோவில் மிகவும் முக்கியமானது. இந்த கோவிலை பார்க்கும்போது, அது இமாலயர்களின் கட்டிடக்கலையை பிரதிபலிப்பதாக உள்ளது. நேபாளத்தில் இதுபோன்று கலையம்சத்துடன் கூடிய கட்டிடங்கள் காணப்படுகிறது.

மூடபித்ரியில் உள்ள சந்திரநாதா கோவில் தான் கர்நாடகத்தில் இருக்கும் மிகப்பெரிய ஜெயின் கோவில் ஆகும். இது 1429 முதல் 1430-ம் ஆண்டுக்குள் நாமங்களா தளபதி தேவராய உடையரால் கட்டப்பட்டது. இந்த கோவில் 1,000 தூண்களை கொண்டது. அதில் இரு தூண்கள் ஒரே மாதிரியாக உள்ளன. இந்த கோவில் கருவறையில் சந்திரநாத சாமியின் பஞ்சலோக சிலை உள்ளது.

3 மாடிகளை கொண்ட இந்த கோவிலின் நுழைவுவாயில் பகுதியில் ஒரே கல்லால் ஆன 16 அடி உயர தூண் உள்ளது. அது ‘மகாஸ்தம்பம்’ என்று அழைக்கப்படுகிறது. கோவிலில் உள்ள சுவர்கள், தூண்களில் சாமிகள், இலைகள், பூக்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டு உள்ளன. மேலும் ஒட்டகசிவிங்கி, சீன டிராகன் ஆகிய சிற்பங்கள் ஜெயின் வியாபாரிகள் ஆப்பிரிக்கா, சீன நாடுகளுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்ததை சுட்டிக்காட்டுவதாக உள்ளன. இதுதவிர இந்த கோவிலில் விலை மதிப்பற்ற ஆபரணங்களும், ஜெயின் சாமியார்களின் சிலைகளும் வைக்கப்பட்டு உள்ளன. மங்களூருவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இந்தக்கோவில் அமைந்துள்ளது.
Tags:    

Similar News