ஆன்மிகம்
உச்சிநாதேசுவரர் கோவில்-திருநெல்வாயல்

உச்சிநாதேசுவரர் கோவில்-திருநெல்வாயல்

Published On 2020-05-02 08:15 GMT   |   Update On 2020-05-02 08:15 GMT
திருஞானசம்பந்தருக்கு உச்சிப் பொழுதில் உணவு அளித்துப் பசியை போக்கியதால் இறைவனுக்கு உச்சிநாதேஸ்வரர் என்று பெயர்.
இறைவன் பெயர் - உச்சிநாதேசுவரர்
இறைவி பெயர் - கனகாம்பிகை

கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் ஆலயம் காட்சி அளிக்கிறது. கோவிலுக்கு எதிரே நீராழி மண்டபத்துடனுள்ள கிருபாசமுத்திரம் என்ற திருக்குளம் ஆலயத்தின் தீர்த்தமாக விளங்குகிறது. உள் பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், பஞ்சலிங்கங்கள், சனிபகவான், சந்திரன் முதலிய சந்நிதிகள் உள்ளன. வலம் முடித்து முன்மண்டபம் சென்றால் வலதுபுறம் நவக்கிரக சந்நிதியும் பள்ளியறையும் உள்ளன. துவாரபாலகரைத் தொழுது வாயிலைக் கடந்தால் வலதுபுறம் நின்ற திருக்கோலத்துடன் காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது. நடராசசபையில் உள்ளது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சிவலிங்கத்தின் பின்புறம் பார்வதி, பரமேஸ்வரர் திருவுருவங்கள் உள்ளன.

திருஞானசம்பந்தருக்கு உச்சிப் பொழுதில் உணவு அளித்துப் பசியை போக்கியதால் இறைவனுக்கு உச்சிநாதேஸ்வரர் என்று பெயர். சம்பந்தர் திருவேட்களத்தில் தங்கி இருந்த நாட்களில் இத்தலத்திற்கு வந்து வழிபட்ட தலம்.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஓரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.

தினந்தோறும் 5 கால பூஜைகள் இவ்வாலயத்தில் திடைபெறுகிறது. வைகாசி விசாகத்தன்று கோவிலுக்கு எதிரே உள்ள திருக்குளத்தில் தீர்த்தவாரியும், மாலையில் பஞ்சமூர்த்திகளின் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

ஆலய முகவரி
    
அருள்மிகு உச்சிநாதேசுவரர் திருக்கோவில்
சிவபுரி
சிவபுரி அஞ்சல்
வழி அண்ணாமலை நகர்
சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 608002

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Tags:    

Similar News