ஆன்மிகம்
இறைவன், இறைவி

கொருக்கை வீரட்டேஸ்வரர் ஆலயம்

Published On 2020-04-01 02:28 GMT   |   Update On 2020-04-01 02:28 GMT
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வீரட்டேஸ்வரர் ஆலயம். இதற்கு கொருக்கை திருத்தலம் என்றும் பெயர்.
தேவர்களுக்கும், அரசர்களுக்கும் அவ்வப்போது போர் நடந்துகொண்டே இருக்கும். தேவர்கள் போர் முடிந்து ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தால், அசுரர்கள் அதற்கு இடம்கொடுக்கவே மாட்டார்கள். தேவர்களுக்கு இம்சை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இதனை தேவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சிவபெருமானை சந்தித்தனர். தங்களைக் காப்பாற்றும்படி முறையிட்டனர்.

“முருகன் வருவான்; உங்களைக் காப்பாற்றுவான்” என்று கூறிவிட்டு, தவத்தில் உட்கார்ந்து விட்டார். ஆண்டுகள் பல கடந்தும் அசுரர்களின் தொல்லை தீரவில்லை. முருகனும் வந்த பாடில்லை. சிவன் தவமும் கலையவில்லை.

இதையடுத்து மன்மதனை அழைத்த தேவர்கள், காமக்கணை வீசி சிவனான யோகீஸ்வரரின் தவத்தை கலைக்கும்படி கூறினர். ஆனால் அதற்கு மன்மதன் மறுத்துவிட்டான். “சிவன் மீது கணை வீச மறுத்தால், சாபம் அளித்து விடுவோம்” என்று தேவர்கள் பயமுறுத்தியதால், வேறு வழியின்றி சிவனின் மீது மன்மதன் பாணம் ஏவினான்.

அதுவரை கிழக்கு நோக்கி இருந்த சிவன், மேற்கு நோக்கி திரும்ப, அவரது நெற்றிக்கண் பார்வை பட்டு மன்மதன் எரிந்துபோனான். தனது மான சீகப் புதல்வனை இழந்த மகாவிஷ்ணுவும், தன் கணவனை இழந்த ரதியும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.

“உன் கணவன், உன் கண்ணுக்கு மட்டுமே தெரிவான். மற்றவர் கண்ணுக்கு அருபமாகத் தெரிவான்” என ரதியிடம் கூறிய யோகீஸ்வரர், மன்மதனுக்கு உயிர்பிச்சை அளித்தார்.

இந்த யோகீஸ்வரர் அருள்பாலிக்கும் தலம் கொருக்கை. இங்குள்ளது வீரட்டேஸ்வரர் ஆலயம். இறைவி ஞானாம்பிகை அம்மன். இறைவன் யோகீஸ்வரர். இவருக்கு ‘காமதகன மூர்த்தி’ என்ற பெயரும் உண்டு. பிரம்மாவும், சிவனும் ஒரே கோவிலில் அருள்புரிவது சிறப்பம்சம். காமதகனபுரம், கடுவனம் என்ற பெயர்களும் இந்த ஊருக்கு உண்டு.

ஊரின் நடுநாயகமாய் அமைந்துள்ளது வீரட்டேஸ்வரர் ஆலயம். நவக்கிரகங்கள், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி ஆகியோரின் திருமேனிகளும் இங்கு உள்ளன. உட்பிரகாரத்தில் வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணியர், குறுங்கை விநாயகர், சோமாஸ்கந்தர் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருக்கின்றனர்.

சிவபெருமான் யோக மூர்த்தியாக இடது காலை மடித்து வலது காலைத் தொங்க விட்டு அமர்ந்துள்ளார். பின் இரு கரங்களில் மான், மழு ஏந்தி, முன் வலதுகரம் அபய முத்திரையுடனும் முன் இடது கரத்தை முழங்கால் மீது நீட்டி வைத்தவாறும் உள்ளார். இறைவனுக்குச் சுற்றிலும் சனகாதி முனிவர்கள் உள்ளனர். இவருக்கு இடப்புறம் நின்ற கோலத்தில் அம்பிகை காட்சியளிக்கிறாள். இந்த அன்னையை ‘பூரணி’ என்று அழைப்பார்கள். இந்தச் சன்னிதிக்கு எதிரில், மன்மதன் கரும்பு வில், மலர்ப் பாணத்துடனும், ரதிதேவி கிளியை ஏந்தியும் காட்சி அளிக்கின்றனர்.

இறைவன் மேல் பாணம் போடும் முன், மன்மதன் கங்கணம் கட்டிக் கொண்ட இடம் ‘கங்கணம் புத்தூர்’ எனவும், வில் எடுத்த ஊர் ‘வில்லியநல்லூர்’ எனவும், நாண் ஏற்றிய ஊர் ‘நாரண மங்கலம்’ எனவும், மன்மதன் எரிந்த இடம் ‘விபூதி குட்டை’ என்ற பெயருடனும் கொருக்கையை சுற்றிய ஊர்களாக அமைந்துள்ளன.

திரிசூல கங்கை என அழைக்கப்படும் தீர்த்தம், கோவிலுக்கு எதிரே உள்ளது. கோவிலில் நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. சித்திரை வருடப் பிறப்பு, ஆடி மாதப் பிறப்பு, மார்கழி ஐப்பசி மாதப் பிறப்புகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மாசி மகம் அன்று சுவாமியும், அம்மனும் வீதி உலா வருவார்கள்.

தொடர்ச்சியாக 11 நாட்கள், இத்தல இறைவனுக்கு பால், தேன் கொண்டு அபிஷேகம் செய்து, அந்த தீர்த்தத்தில் கடுக்காய் அரைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

புத்திர பாக்கியம் பெற, திருமண தடை நீங்க இத்தல இறைவனை வேண்டிக்கொள்கிறார்கள். மேலும் பேசுவதில் தடுமாற்றம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் பேச்சு வன்மை பிறக்கும் என்கிறார்கள். சிவராத்திரி அன்று இறைவனையும், இறைவியையும் லட்ச தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபடுகிறார்கள். அப்போது ஆலயம் ஜொலிப்பதைக் காண கண் கோடி வேண்டும்.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் மணல்மேடு என்ற இடம் உள்ளது. இங்கிருந்து தென்கிழக்கே 6 கிலோமீட்டர் சென்றால், கொருக்கை திருத்தலத்தை அடையலாம்.

Tags:    

Similar News