ஆன்மிகம்
நடுதறிநாதர், கோவில் தோற்றம்

திருக்கன்றாப்பூர் ஈசன்

Published On 2020-03-23 01:28 GMT   |   Update On 2020-03-23 01:28 GMT
பாடல் பெற்ற ஸ்தலங்களில் திருகன்றாப்பூர் (கோவில் கண்ணாப்பூர்) நடுத்தறியப்பர் கோவிலும் ஒன்று. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் சோழ மன்னர்கள் ஆட்சி செய்த இடங்களில் ஏராளமான கோவில்கள் கட்டினர். சங்க இலக்கியங்களைப் படைத்த பல்வேறு தமிழ் அறிஞர்கள் பல கோவில்களைப் பற்றிப் பாடல்களையும் பாடியுள்ளனர். அவ்வாறு பாடல் பெற்ற ஸ்தலங்களில் திருகன்றாப்பூர் (கோவில் கண்ணாப்பூர்) நடுத்தறியப்பர் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் இருந்து 8 கிலோ மீட்டர் சுற்றளவில் தேவார பதிகம் பாடப் பெற்ற பத்து கோவில்கள் அமைந்துள்ளன.

திருகன்றாப்பூர் கோவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. சிறிய அளவில் மூன்று ராஜ கோபுரங்களைப் பார்க்க முடிகிறது. கோவிலில் கொடிமரம் இல்லை. பலிபீடம், நந்தி சற்று உயந்த பீடத்தில் காணப்படுகிறார். கோவிலின் உள் பிரகாரத்தைச் சுற்றி வரும் போது ஆறு வகையான விநாயகர், முருகன், பிடாரியம்மன், துர்க்கை, சந்திரன், லிங்கோத்பவர், சூரியன், நவக்கிரகங்கள், சனீஸ்வரன் சன்னிதிகள் உள்ளன. சனி பகவானுக்கு அருகில் திருஞானசம்பந்தரையும், அப்பரையும் காணலாம்.

பிரகாரத்தை சுற்றி வந்த பிறகு, வலதுபுறம் வள்ளிநாயகி என்ற மாதுமை நாயகி அம்பாள் நின்ற நிலையில் காட்சி தரும் சன்னிதி உள்ளது. அதற்கு நேராக மூலவர் நடுதறிநாதர் என்றழைக்கப்படும் நடுதறியப்பர் தரிசனம் தருகிறார். கோவிலின் மகாமண்டபத்தில், பத்து பதிகமும் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு

தன்னுடைய கோபத்திற்கு ஆளான சுதாவல்லி எனும் வித்யாதரப் பெண்ணை, மண்ணுலகத்தில் பிறந்து சிவனைப் பூஜித்து எம்மை அடைவாய் என்று சபித்தார், உமாதேவி. அதன்படி அந்தப் பெண், சோழநாட்டில் தேவூருகுத் தெற்கே அமைந்துள்ள இத்திருத்தலத்தில், சைவ வேளாளர் மரபில் கமலவல்லி என்றத் திருப்பெயருடன் பிறந்து வளர்ந்து வந்தாள். சைவ நெறியில் வளர்ந்து சிவபெருமானையே நினைத்து, பூஜை செய்து வந்தாள்.

திருமண வயது வந்தவுடன் அவளுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்குப் பிறகும், சிவபெருமானிடம் பேரன்பு கொண்டதால், உரிய பூஜைகள் செய்து வாழ்ந்து வந்தாள். ஆனால் கணவரும், மாமியாரும் சிவனை வழிபடுவதை விரும்பவில்லை. எனவே அவர்கள் இருவருக்கும் தெரியாதவறு சிவலிங்க வழிபாடு செய்து வந்தாள்.

ஒருநாள் சிவலிங்க வழிபாட்டைக் கண்ட கணவன், அந்த சிவலிங்கத்தை கிணற்றில் எறிந்து விட்டான். கணவனின் செயலைக் கண்டு வருந்திய கமலவல்லி, வீட்டின் பின்புறம் கன்றுக் குட்டிகள் கட்டப்பட்டு இருந்த, ஒரு தறியையே (ஆப்பு) சிவபெருமானாக பாவனை செய்து வழிபட்டு வந்தாள். அதையும் கண்டுபிடித்த அவளது கணவன், கடுமையாகக் கோபம் கொண்டு அத்தறியைக் கோடரியால் வெட்டினான். இரண்டாக பிளவுபட்ட தறியில் இருந்து ரத்தம் வழிந்தது.

கமலவல்லியின் ஆத்மார்த்த பக்தியை உலகில் உள்ளவர்களும், அவளது கணவனும் அறிய வேண்டுமென்பதற்காக அக்கட்டுத் தறியில் லிங்க வடிவத்தில் இறைவன் காட்சி தந்தார். கமலவல்லியும், அவளது கணவனும் சிவலோகம் அடைந்தனர். சிவபெருமான் தறி என்ற ஆப்பிலிருந்து வெளிப்பட்டு சைவப் பெண்ணிற்கு அருள்புரிந்த இடம் என்பதாலும், கன்று கட்டும் தறி லிங்கமாக மாறியதாலும் இத்தலம் திருக்கன்றாப்பூர் (கன்று+ஆப்பு+ஊர்) என்றழைக்கப்படுகிறது.

அந்த கன்றுக் குட்டியின் நடுதறி இருந்த இடமே, இன்று நடுதறிநாதர் கோவிலாக விளங்குகின்றது. இன்றும் மூலவரது உச்சியில் கோடரி வெட்டு உள்ளதைக் காணலாம். இடும்பன் என்னும் அசுரன் இத்தலத்தில் நடுதறிநாதரை வழிபட்டு அருள்பெற்றான்.

இக்கோவிலின் வழியே நடந்துசென்றால், இக்கோவிலில் தங்கி வாழ்ந்த புண்ணியத்தைப் பெறலாம். இக்கோவிலில் தங்கி உதவி செய்தால், நல்ல மனைவி - நல்ல மகள் கிடைக்கப் பெற்று, எல்லா வளங்களையும் செல்வங்களையும் பெறுவர். ‘கன்றாப்பூர்’ என்று ஒருமுறை சொன்னாலேயே பாவம் கெடும். நோய் நீங்கும். நல்வாழ்வு கிட்டும். இத் தலத்தில் வாழ்வோர் இம்மையில் சிவயோகத்தில் அமர்ந்து மறுமையில் சிவபோகம் துய்ப்பர்.

கண் சம்பந்தப்பட்ட நோய் இருப்பவர்கள், இந்தக் கோவிலுக்கு அருகில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் குளித்தால் கண் நோயில் இருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது.

இந்த ஆலயத்தின் தல விருட்சமாக பனை மரம் (கல்பனை) உள்ளது. இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

ரா.சுந்தர்ராமன்
Tags:    

Similar News