ஆன்மிகம்
மேகநாத சுவாமி, லலிதாம்பிகை, அம்பாளின் கோபம் தணிக்கும் ஈசன்

திருமீயச்சூர் மேகநாத சுவாமி கோவில்

Published On 2020-01-16 01:31 GMT   |   Update On 2020-01-16 01:31 GMT
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமீயச்சூர் மேகநாத சுவாமி ஆலயம், பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்குகிறது. இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமீயச்சூர் மேகநாத சுவாமி ஆலயம், பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்குகிறது. இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

காசிபரின் மனைவி விநதை. ஏற்கனவே காசிபரின் மற்ற மனைவியர்களின் மூலம் பிறந்த மகன்கள் தேவர்களாகவும், அசுரர்களாகவும் இருந்து, ஒருவரை ஒருவர் தாக்கி வந்தனர். தனது பிள்ளைகள் அவர்களை போல ஆகிவிடக்கூடாது என நினைத்தாள் விந்தை. எனவே தேவகுருவின் ஆலோசனைப்படி தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, இமயமலை முதல் ஒவ்வொரு தலமாக சென்று சிவபெருமானை நோக்கி தவமிருந்து வந்தார்.

அதன்படி காவிரிக்கரையில் சிவமயமான சூழல் உள்ள திருமீயச்சூர் தலத்துக்கும் வந்தார். இங்கே வந்தவுடன், விநதையின் பிள்ளைகளிடம் வித்தியசமான உணர்வுகள் தொற்றிக்கொண்டது. ஆனந்தமடைந்த விநதை, இத்தலத்திலேயே பல நாட்கள் தங்கி தவமேற்றினார். இதையடுத்து இறைவன் வெளிப்பட்டு, அவளது பிள்ளை களுக்கு பகை உணர்வு நீங்க ஆசி வழங்கினார். விநதையின் பிள்ளையில் ஒருவரான கருடனை, திருமாலுக்கு வாகனமாகும் வரத்தை அருளினார்.

விநதை அத்தலத்திலேயே 12 ஆண்டுகள் தவமேற்றினார். இதையறிந்து காசிபர் இத்தலம் வந்தார். சிவபெருமான் தோன்றி, “இத்தலம் ‘விந்தா சேத்திரம்’ எனப்படும். இங்கு வியாழக்கிழமை வழிபாடு செய்பவர்கள் முக்தி அடைவார்கள்” என்று கூறி மறைந்தார்.

நோய் தீர்க்கும்..


உஜ்ஜனியைச் சேர்ந்த சவுபாக்கியன் என்பவன், பெரும் செல்வந்தன். அதே நேரம் யாருக்கும் தானம் செய்யாத கஞ்சன். பணம் சேர்க்க ஆசைப்பட்டு பல பாவங்களையும் செய்துவந்தான். அந்தப் பகுதியை ஆண்ட மன்னன், சவுபாக்கியனுக்கு, சிவாலயத்தின் நிர்வாகங்களை கவனிக்கும் பொறுப்பை அளித்திருந்தார். அவனோ, அந்த சொத்துக்களையே அபகரிக்க ஆரம்பித்து விட்டான்.

ஒருநாள் காளி கோவிலுக்கு சிங்க வாகனம் செய்வதற்காக, மரம் வாங்கி வெட்டி பாதக்குறடு செய்தான். அப்போது அக்குறடு அவன் வலது காலில் பட்டது. அதனால் ஏற்பட்ட காயம், பெரு நோயாக மாறி அவனை இம்சித்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான்.

ஜோதிடர் ஒருவர் “உனது செல்வங்களில் மூன்றில் ஒரு பங்கை சிவபெருமான் பூஜைக்கு அர்ப்பணித்துவிடு. அதன் பின் ஆலய யாத்திரை செய்து வா. எந்த தலத்தில் தங்கும் போது உன் நோய் குறைகிறதோ, அங்கு தங்கி வழிபடு. எல்லாம் சரியாகிவிடும்” என்றார்.

அவ்வாறே செய்த சவுபாக்கியன் பல தலங்களுக்குச் சென்று விட்டு, இறுதியில் திருமீயச்சூர் வந்தான். இங்கு கோவில் உள்ள புஷ்கரணியில் நீராடினான். அப்போது அவனது காயங்களில் எரிச்சல் இல்லை. இந்த அதிசயத்தை கண்டு பல மணி நேரம் நீராடினான். உடலில் இருந்த புண்கள் மறைந்தன. உடல் பொன்னிறமாயிற்று. புதிய அழகும், தேக சுகமும் பெற்றான். பிறகு ஒரு மண்டலம் இத்தலத்திலேயே தங்கி வழிபட்டான்.

ஆலய அமைப்பு

திருமீயச்சூர் திருக்கோவிலும், திருமீயச்சூர் இளங்கோவிலும் ஒரே ஆலயத்தில் விளங்கும் திருக்கோவில்கள். திருமீயச்சூர் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகம் ஒன்றையும், திருமீயச்சூர் இளங்கோவில் திருநாவுக்கரசர் அருளிய தேவாரத் திருப்பதிகம் ஒன்றையும் பெற்று விளங்குகின்றன.

திருமீயச்சூர் கோவில் மூல விமானம் தனிக் கலையழகோடு திகழ்கிறது. கோவிலின் வடக்கு உள் பிரகாரத்தில் இளங்கோவில் காணப்படுகிறது. ஒரு கோவிலை திருத்தி விரிவுபடுத்தி கட்டத் தொடங்கு முன், நித்திய பூஜைக்கு பிறிதொரு சிவலிங்கம் நிறுவி, சிறிய கோவில் அமைத்து வழிபடுவது வழக்கம். இந்த சிறிய கோவிலை தொடர்ந்து 12 ஆண்டுகள் வழிபட்டால் அது தனி ஆலயமாகி விடும். அப்படி உருவானதுதான் இந்த இளங்கோவில்.

மூலவர் சுயம்புலிங்கம், தாயார் லலிதாம்பாள். ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் தோன்றிய தலம் இதுவே. இத்தலத்திற்கு தலவிருட்சம் வில்வம் ஆகும். கோவிலில் தினமும் 6 கால பூஜை நடக்கிறது. வெள்ளிக்கிழமை தோறும் ஸ்ரீலலிதாம்பிகாவுக்கு விசேஷ ஆராதனை நடைபெறும்.

ஆடிப்பெருக்கு, விநாயகர்சதுர்த்தி, நவராத்திரி, வைகாசி பவுர்ணமி அன்று ஏக தின லட்சார்ச்சனை, திதி மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. மார்கழி மாதம் திருவாதிரை விசேஷமானது. தை பொங்கல் அன்று இத்தல இறைவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தைமாதம் 10 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

இத்தலத்தின் வடக்கு உள் பிரகாரத்தில் சுவாமி கோஷ்டத்தில் உள்ள கல்யாண சுந்தரேசுவரரை, மணமாகாத பெண்கள் பிரார்த்தனை செய்து கொண்டு மலர் மாலை சாத்தி வழிபட்டு வந்தால் விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

திருவாரூர் மாவட்டத்தில் திருமீயச்சூர் திருத்தலம் உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் மெயின் ரோட்டில் பேரளம் என்ற இடத்தில் இடதுபுறம் திரும்பி 1 கிலோமீட்டர் தூரம் சென்றால் கோவிலை அடையலாம்.

இழந்ததை மீட்டும் தரும் கோவில்

கோளபன் என்ற அரசன் நல்லாட்சி நடத்தினாலும், முற்பிறவி வினை, அவனை கெட்டவனாக மாற்றியது. இந்த நிலையில் மதங்க தேசத்து அரசன் கும்பகரன், கோளபன் நாட்டின் மீது படையெடுத்து வந்தான். 6 மாத காலம் போர் நடந்தது. இதனால் கோளபன் நாட்டில் உணவுக்கு பஞ்சம் ஏற்பட்டது. மக்களின் நன்மை கருதி, அவன் போரை கைவிட்டான். இறுதியில் காட்டுக்குச் சென்றான். இதைப் பயன்படுத்திய கும்பகரன் பல சிவாலயங்களை சூறையாடினான்.

கோளபனிடம் அவனது மனைவி பிரஜிதை, “ஒருவர் முகர்ந்த பூவை முகராமலும், பிறரது ஆடைகளை அணியாமலும், கிடைத்த உணவை உண்டு காட்டில் தவமியற்றி வந்தால் ஸ்ரீதேவி அருள் கிடைக்கும்” என்று கூறி அனுப்பிவைத்தாள். அதன்படியே கோளபனுக்கு தேவியின் அருள்கிடைத்தது. அவன் இழந்த ஆட்சியையும், பொருளையும் திரும்பப் பெற்றான். இது நடந்தது திருமீயச்சூர் திருத்தலம். எனவே இங்கு வந்து வணங்கினால், இழந்த பொருளை மீட்கலாம் என்பது நம்பிக்கை.

கோபம் தணிக்கும் ஈசன்

சூரியன் பிரகாசமாக இருந்தாலும், ஒரு காலகட்டத்தில் கரிய நிறமாக காட்சியளித்தார். இதையடுத்து அவர், மற்ற தேவர்களை போல தானும் செந்நிறமாக மாற வேண்டும் என பிரார்த்தனை செய்தார். ரிஷிகளின் ஆலோசனைப்படி சூரியன், இத்தலத்துக்கு வந்து சிவபெருமானை வணங்கினார். இதையடுத்து அவரது கருமை நிறம் நீங்கி செந்நிறமானது. எனவே இத்தல சிவபெருமான் ‘மிகிராருனேஸ்வரன்’ என அழைக்கப்பட்டார்.

பல காலம் கழித்து சூரியன் மீண்டும் இங்கு வந்தார். அப்போது ஈசனைக் காணவில்லை. அருகில் இருந்த காட்டிற்குள் தேடினார். அங்கே யோகநிலை நீங்க சுயம்பு லிங்க மூர்த்தியாக ஈசன் காட்சி தந்தார். தன் கணவரின் யோக நிலையை கலைத்த சூரியன் மீது, லலிதா தேவிக்கு கோபம் வந்தது. அவர் சூரியனுக்கு சாபம் அளிக்க முற்பட்டார். ஆனால் அவரது கோபத்தை ஈசன் தணித்தார். இதையடுத்து கோபம் தணிந்த லலிதாதேவி, சாந்த நாயகியாக இங்கு அமர்ந்துள்ளார்.

கோவில் வளாகத்தில் அன்னையின் கோபத்தினை, முகவாயை பிடித்து தடுக்கும் ஈசனை நாம் தரிசிக்கலாம். ஒரு பக்கம் இருந்து பார்த்தால் இந்த அன்னை சிரிப்பது போலவும், மறுபக்கம் இருந்து பார்த்தால் கோபமாக இருப்பது போலவும் காட்சியளிப்பார்.

அகத்திய வில்வம்

சித்தர்களில் முதன்மை பெற்ற அகத்தியர், வில்லவன், வாதாபி என இரு அரக்கர்களை வதம் செய்தார். இதனால் அவருக்கு ‘ஹத்தி தோஷம்’ ஏற்பட்டது. அகத்தியருக்கு அடிக்கடி வயிற்றுவலி உண்டானது. எனவே முருகப்பெருமானிடம் பாபவிமோசனம் வேண்டினார். அவர் ஆலோசனைப்படியே இக்கோவில் இருக்கும் வனத்துக்கு வந்தார். அங்கே காட்டின் நடுவில் ஜோதி லிங்கமாக சிவன் காட்சி தந்தார். அவரை வணங்கி நின்றவுடன் பாவம் அழிந்து சிவஞானம் பெற்றார். அகத்தியர் பூஜை செய்த வில்வ மரத்தை உள்ளே வைத்து ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது. அங்கு காணப்படும் வில்வமரம் “அகத்திய வில்வம்” என்றே அழைக்கப்படுகிறது.

முத்தாலங்குறிச்சி காமராசு
Tags:    

Similar News