ஆன்மிகம்
அனுமன், ஸ்ரீதேவி- பூதேவி சமேத சீனிவாசர்

ஆனந்தம் தரும் சீனிவாசப் பெருமாள் கோவில்

Published On 2020-01-03 01:36 GMT   |   Update On 2020-01-03 01:36 GMT
தில்லைஸ்தானம் பேருந்து சாலையின் அருகிலேயே உள்ளது சீனிவாசப் பெருமாள் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தில்லைஸ்தானம் பேருந்து சாலையின் அருகிலேயே உள்ளது சீனிவாசப் பெருமாள் ஆலயம். முகப்பில் அழகிய ராஜகோபுரம் உள்ளே நுழைந்ததும் கொடிமரம் உள்ளது. அடுத்து உள்ளது மகாமண்டபம். அதைத் தொடர்ந்து கருவறை முகப்பில் இரு துவாரபாலகர்கள் காவல் காக்க உள்ளே கருவறையில் சீனிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவியுடன் சேவை சாதிக் கிறார். நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் எம்பெருமானின் முன், உற்சவர் மற்றும் தேவியர் திருமேனிகள் உள்ளன.

திருச்சுற்றில் தெற்கில் தாயார் அலர்மேல் மங்கையின் தனி சன்னிதியும், சக்கரத்தாழ்வார் சன்னிதியும் உள்ளன. வடக்கில் அனுமன் கையில் அமிர்த கலசத்தை ஏந்தியபடி அருள்புரிகிறார். அனுமனின் இந்த அமைப்பு மிகவும் சிறப்பான அமைப்பாக கருதப்படுகிறது. சீதாதேவி வனவாசத்தின் போது ஒரு நாள் மயக்கமடைய, அனுமன் கலசத்தில் இருந்த அமிர்தத்தை சீதைக்கு தர, சீதையின் மயக்கம் தெளிந்ததாம்.

சீதையின் நோய் தீர்த்த அமிர்த கலசத்துடன் கூடிய இந்த அனுமனை வேண்டுவதால் நோய்கள் குணமாவதாக பக்தர்களின் நம்பிக்கை.

வியாபாரம் பெருகவும், திருமணம் விரைந்து நடக்கவும், நோய்கள் தீரவும் அனுமனிடம் வேண்டிக் கொள்ளும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் அனுமனுக்கு அபிஷேகம் செய்து வெண்ணெய் காப்பிட்டு, தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றனர்.

இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் மிகச் சிறப்பாக பத்து நாட்கள் நடைபெறுகிறது. இந்த பத்து நாட்களும் பெருமாள் வீதியுலா வருவதுண்டு. பத்தாம் நாள் பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவியுடன் தேரில் பவனி வரும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

கார்த்திகை மாதம் கடைசி நாளன்று லட்ச தீபம் ஏற்றப்பட்டு ஆலயம் ஒலிமயமாக ஜொலிக்கும். கார்த்திகை அன்று சொக்கப்பனை தீபம் ஏற்றப்படும். தாயார் ஒவ்வொரு மாதமும் உள்சுற்றில் உலா வருவதுண்டு. மார்கழியில் ஏகாதசியில் சொர்க்கவாசல் திறப்பும், இராப்பத்து உற்சவமும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. சுற்றிலும் அழகிய மதில் சுவர்களுடன் கூடிய இந்த ஆலயம் இந்து அறநிலையத் துறையால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

வேண்டும் வரம் தரும் சீனிவாசப்பெருமாளையும் அமிர்த கலசத்துடன் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரையும் தில்லைஸ்தானம் சென்று நாமும் ஒரு முறை தரிசித்து வரலாமே.

அமைவிடம்

கல்லணை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் கல்லணையில் இருந்து 30 கி.மீ தொலைவிலும், திருவையாற்றில் இருந்து 1 கி.மீ தொலைவிலும் உள்ளது தில்லைஸ்தானம் என்ற இந்த தலம்.
Tags:    

Similar News