ஆன்மிகம்
மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில்

மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில்- மத்தூர்

Published On 2019-08-14 01:43 GMT   |   Update On 2019-08-14 01:43 GMT
இந்த மகிஷாசுரமர்த்தியின் ஆலயம் திருத்தணியில் இருந்து திருப்பதி போகும் மார்க்கத்தில் 7 கி.மீட்டரிலும், பொன்பாடி ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கி.மீட்டரிலும் இருக்கிறது.
இந்த மகிஷாசுரமர்த்தியின் ஆலயம் திருத்தணியில் இருந்து திருப்பதி போகும் மார்க்கத்தில் 7 கி.மீட்டரிலும், பொன்பாடி ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கி.மீட்டரிலும் இருக்கிறது. இந்த அம்மன் மத்தூர் என்ற ஊரில்தான் உள்ளது.

அன்று யுகாந்த காலத்தில் மகிஷாசுரன் பிரம்ம தேவனிடம் ஏராளமான வரத்தைப் பெற்றுத் தேவர்களைத் துன்புறத்தி வந்தான். தான் எவராலும் கொல்லப்படக்கூடாது. ஆனால் ஒரு பெண்ணால் மட்டும் கொல்லப்பட வேண்டும் என வரம் கேட்டுப்பெற்றான்.

இவ்வாறு வரம் பெற்ற அவன் தேவர்களைத் துன்புறுத்தியதால் அவனை வதம் செய்ய மூம்மூர்த்திகளும் சேர்ந்து அம்மகிஷனைக் கொல்ல பேரொளி கொண்ட ஒரு பெண்ணைப் படைத்து அவளுக்குத் தங்கள் சக்தியை அளித்தனர். மற்ற தேவர்களும் தங்களது படைக்கருவிகளை அவளுக்குக் கொடுத்து உதவினர் என்பதை மார்க்கண்டேய புராணமும், துர்கா சப்தசதியும் கூறும். அவள் தான் மகிஷாசுரனைப் பின்னாளில் வதம் செய்து தேவர்களைக் காப்பாற்றினாள். அதனால் அவளுக்கு “மகிஷாசுர மர்த்தனி” என்ற பெயர் வழங்கலாயிற்று.

இந்த மகிஷாசுர மர்த்தினி தனது 8 கரங்களில் சங்கு, சக்கரம், வில் அம்பு, கத்தி, கேடயம், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தி ஏழு கபாலங்களுடன் மாலையையும் பூண்டு எட்டடி உயரமாகக் கம்பீர நிலையில் நின்று அருள் கடாட்சம் புரிவதைக் காணலாம்.

இந்த அம்பிகையின் பாதங்களின் கீழே திரிசூலம் குத்த எருமை உருவத்துடன் மனித முகம் உள்ள மகிஷாசுரன் இரு கரங்களோடு நின்ற நிலையில் உள்ளான். வலது பக்கம் அவனது துண்டு படுத்திய எருமைத் தலை கீழே கிடக்கிறது. வாலின் பக்கமாக அன்னையின் வாகனமான சிம்மன் அந்த அசுரனைத் தாக்குவது போன்ற காட்சி உள்ளது.

இவ்வம்பிகை புன் சிரிப்பு முகத்தில் தவழ ஈசான மூலையை நோக்கியபடி காட்சி தருகிறாள். நிற்க.

1962-ம் ஆண்டு இந்த பகுதியில் அரக்கோணத்திற்கும் ரேணுகுண்டாவிற்கும் உள்ள ரெயில் தடத்தை அமைத்திட முயற்சித்த போது பணியாட்களில் சிலர் மூர்ச்சையாகிக் கீழே சாய்ந்தனர். அதன் பின்னரே மேட்டுப் பாங்கான அவ்விடத்தில் சென்றவர்கள் மயங்கி விழுந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்த மத்தூர் மக்கள் அவ்விடத்திற்குச் “சக்திமேடு” என்று பெயரிட்டனர். மேலும் எவரும் அப்பக்கமாகச் செல்வதற்கும் பயங்கொண்டனர்.

மறுபடியும் கடவுளை வேண்டியபடியே சில ரெயில்வே பணியாளர்கள் அங்கு பாதை வெட்டினர். அப்பொழுது பள்ளம் தோண்டிய இடத்திலே மகிஷாசுரமர்த்தனியின் உருவச் சிலை குப்புறக் கவிழ்ந்து மண்ணால் மூடப்பட்டிருந்ததாம். மத்தூரில் உள்ள பக்தர்கள் அதை வெளியில் எடுத்து வந்து காஞ்சி ஆசார்யாளின் யோசனைப்படி அங்குக் கோவில் கட்டி அம்மனைப் பிரதிஷ்டை செய்தனராம். இங்கு சம்மமும், பலிபீடமும் உள்ளன.

மேலும் இங்குள்ள வடபுறப்பிராகாரத்தில் உள்ள மரத்தில் திருமணம் நடக்க வேண்டியும், பிள்ளைவரம் வேண்டியும் விதவிதமாகக் கலர்த் துணிகளைக் கட்டிவைப்பதுண்டு. செவ்வாயன்று சிறப்பு வழிபாடு உண்டு. நவராத்திரி காலத்திலும், பங்குனியிலும் இவ்வம்மனுக்கு திருவிழா நடைபெறும்.

இங்குள்ள அம்மனை பலர் வந்து வழிபட்டு வேண்டுதலை செய்து பலன் பல பெறுவதைக் காணலாம். ஆகவே நாமும் மத்தூர் சென்று மகிஷாசுரமர்தினியை வணங்கி வழிபட்டு வேண்டுவன பெற எம்மோடு வாருங்கள்.

துர்க்கைக்கு ராகுகால பூஜை

மகிஷாசுரனை வதம் செய்ய ஈசன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து அதில் இருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறிகளின் மூலம் வாமை, ஜயேஷ்டை, ரவுத்ரி, சர்வபூதமணி, மனோன்மணி என்னும் நவசக்திகளைக் கொண்ட நவதுர்க்கைகளைத் தோற்றுவித்தார்.

இந்த நவசக்திகளும் ஒன்றாகி துர்க்கா பரமேஸ்வரியாக வடிவெடுத்து சிம்ம வாகனத்தில் புறப்பாடு எருமை வடிவில் இருந்த மகிஷனை வதைத்தார். அதன் காரணமாக ‘மகிஷாசுர மர்த்தினி’ என்னும் திருநாமத்தைக் கொண்டதாக வரலாறு கூறுகிறது.

எருமை வாகனத்தில் சங்கு, சக்கரம், கதை, கத்தி, கலப்பை, உலக்கை, கேடயம், தோமரம், கோடாளி, கயிறு, குந்தாயுதம், திரிசூலம், ஒப்புறயர்வற்ற சாரங்கம் என்னும் வில்லுடன் துர்க்காதேவி காட்சியளிக்கிறாள்.

துர்க்கையைத் துதிக்க ராகுகாலமே சிறந்தது. ராகுகாலத்தில் பூஜை செய்வோமானால், அந்த பூஜை மற்ற நேரங்களில் செய்யப்படும் பூஜையைவிட பலன் மிகுந்ததாக இருக்கும். அதற்கு ஒரு காரணம் உள்ளது. செவ்வாய்க்கிழமைக்குரிய அங்காரகன் துர்க்கையை மங்கள சண்டிகையாக வழிபட்டு முழுபலனையும் அடைந்தவன்.

செவ்வாய்க்கிழமைகளில் செய்யும் ராகுகால துர்க்கா பூஜைக்கு பலன்கள் அதிகம். திருமணத்தடை நீங்குதல், செவ்வாய் தோஷம் அகலுதல், பீடைகள் விலகுதல், காரிய சித்தி, பகை விலகுதல் போன்ற நன்மைகள் ஏற்படும்.

செவ்வாய்க்கிழமைகளில் மஞ்சள் நிறப் பூக்களான தங்க அரளி, சாமந்தி, நந்தியாவட்டை ஆகிய மலர்களை அர்ச்சனைக்கும், மஞ்சள் நிற வாழைப் பழம், பலாச்சுளை, மாம்பழம், மஞ்சள் வண்ண வெண் பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நிவேதனத்திற்கும் பயன்படுத்தி ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரியைப் பூஜிக்க வேண்டும். எலுமிச்சம் பழங்களைக் கோர்த்த மாலை இந்த அம்மனுக்கு விசேஷம்.

செவ்வாய்க் கிழமையன்று 5 எலுமிச்சம் பழங்களை (நல்ல மஞ்சள் நிறம் உடையவை) எடுத்து இரண்டாக வெட்டிச் சாற்றைச் சிறுபாத்திரத்தில் வடித்து வைத்து விட்டு, இரு எலுமிச்சைத் தோல்களை எதிர்ப்புறமாக மடக்கிக் கிண்ணம் போல் அமைத்து, அதில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றித் திரியிட்டு அம்மன் சன்னதியில் வைக்க வேண்டும். இவ்வாறு 5 எலுமிச்சை மூடிகளில் மொத்தம் 10 விளக்குகள் செய்யலாம்.

ஆனால் ஒரு மூடியைத் தனியே வைத்துவிட்டு, 9 விளக்குகள் மட்டும் ஏற்ற வேண்டும். இந்த 9 விளக்குகளைத் துர்க்கை அம்மன் சன்னதியில் வைக்க வேண்டும். ஆயுள் பலம் பெருக நல்லெண்ணெய்க்குப் பதில் இலுப்பை எண்ணெயை உபயோகிக்கலாம்.

ராகு காலத்தில் துர்க்கை சன்னதியில் முதிய சுமங்கலிப் பெண்ணுக்கு (சுவாசினி) தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, பூ மற்றும் காணிக்கை கொடுத்து வணங்கினால், அவற்றை நேரடியாக சுவாசினி உருவில் துர்க்கா பரமேஸ்வரியே பெற்றுக்கொண்டு அருள் பாலிப்பாள் என்பது ஐதீகம். மேலும் துர்க்கை சன்னதியில் கன்னிப் பெண்களின் கால்களுக்கு நலுங்கிட்டு, கைகளில் வளையல் இட்டுப் பூச்சூட்டி பூஜித்தால் வாழ்க்கையில் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம்.

செவ்வாய்க்கிழமை ராகு கால பூஜையைச் சுமங்கலிப் பெண்கள் கடைப்பிடித்து வர கணவனுக்கு ஆயுள் பெருகும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் தங்கு தடையின்றி நடக்கும். செவ்வாய்க்கிழமை ஆண்கள் விரதம் இருந்து துர்க்கையை வழிபட்டால் கடன், நோய், தொழில் இடையூறுகள் போன்ற தொல்லைகளில் இருந்து பரிபூரணமாக விடுபடலாம்.

கசக்காத வேப்பிலை

அம்மன் வசீகர முகத்தோற்றத்துடன் காணக் காண கவர்ந்து இழுக்கும் உருவம். இக்கோவிலில் உள்ள வேப்ப மரத்தில் உள்ள இலை கசப்பதில்லை. வேப்ப இலையில் உள்ள கசப்பைத் அம்மன் ஈர்த்துக் கொண்டது போல் பக்தர்களின் துன்பத்தையும் அவள் ஈர்த்துக் கொள்வதே இதன் பொருள்.

அம்மனுக்குரிய நைவேத்யம்

ஞாயிறு    - சர்க்கரைப் பொங்கல்
திங்கள்    - பால் சாதம்
செவ்வாய்    - வெண் பொங்கல்
புதன்    - கதம்ப சாதம்
வியாழன்    - எலுமிச்சம் பழ சாதம்
வெள்ளி    - பால் பாயாசம்
சனி    - புளியோதரை, தேங்காய் சாதம்.

மாரியம்மனுக்கு படைத்த பின், குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். எண்ணிய எண்ணம் விரைவில் நிறைவேறும்.
Tags:    

Similar News