ஆன்மிகம்
மயிலாப்பூர் கோலவிழியம்மன் கோவில்

மயிலாப்பூர் கோலவிழியம்மன் கோவில்

Published On 2019-08-05 07:34 IST   |   Update On 2019-08-05 07:34:00 IST
மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. பார்வதிதேவி மயில் உருவம் எடுத்து மயிலாப்பூர் தலத்தில் தவம் இருந்தபோது அவளை அசுரர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட பத்ரகாளி இவள் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு திசை நோக்கி எளிய நுழைவு வாசலுடன் ஆலயம் அமைந்துள்ளது. அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் அன்னையே, கோல விழி அம்மனாக விளங்கு கிறாள். இடது காலடியில் அசுர னின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் காட்சி தருகிறாள். வலது கரங்களில், சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் அன்னை காட்சி தருகின்றாள். சிரசில் உள்ள தீ ஜூவாலை களில் பதி னைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திரு முடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலது புறம் நாகம், காதணி அணிந்து, சிவசக்தி சொரூபமாக அன்னை காட்சி தருகின்றாள். இவளது இயற்பெயர் பத்ரகாளி என்பதாகும். எனவே இந்த ஆல யத்தை பத்ரகாளி அம்மன் ஆலயம் என்றும் சொல்வார்கள்.

‘பத்ர’ என்பதற்கு மங்களம் என்றொரு பொருள் உண்டு. தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவளாகத் திகழ்வதால், இத்தல அம்மன் பத்ரகாளியாகவும் விளங்குகின்றாள். அன்னையின் சிறப்பே அவளின் கோல விழிகள்தான். வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தூண்டும் கருணை அருளும் நாயகி, கோலவிழி அம்மன் என் றால் அது மிகையல்ல.

மயிலை குருஜி இந்த ஆலயத்தை புனரமைப்பதில் பெரும்பங்கு வகித்தவர். அவர் விநாயகரை வேறு இடத்தில் மாற்றி யமைக்க செய்த முயற்சிகள் மட்டும் பயனளிக்க வில்லையாம். இறைவிக்கு முன் கல்லால் ஆன சிறிய தேவி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அபிஷேகங்கள் எல்லாம் இந்த  தேவிக்கே நடைபெறுகின்றன. பெரிய திருவுரு கொண்ட தேவிக்கு பச்சரிசி மாவில் விதவிதமான நிறங்களைக் கலந்து மாவுக்காப்பு சாற்றினால் தீராக்கடன்கள் தீர்ந்து விடுவதாக ஐதீகம். இதைத்தவிர மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு, முத்தங்கி என நாளரு மேனியும் பொழு தொரு அலங்காரமுமாக அன்னை அருளும் ஆலயம் இது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு  மேலான ஆலயம் என்பதை கோலவிழி அம்மனின் உற்சவ திருவுருவை ஆய்வு செய்தபோது கண்டறிந்தி ருக்கிறார்கள். கபாலீஸ்வரர் ஆலயத்தில் எந்த ஒரு விழா வானாலும் இங்கு வந்து அன்னையிடம் உத்தரவு பெற்றே நடத்துகின்றனர். ஐப்பசி மாதம் 14&ம் நாள் முதல் தை மாதம் முடிய மூன்று மாத காலங்கள் கதிர வன் தன் கிரணங்களால் அம்பிகையை வழிபடும் விதமாக கருவறை அமைப்பு உள்ளது. நாக தோசத்தால் பாதிக்கப் பட்டவர்கள், ராகு தசை நடப்பவர்களுக்கு இது பரிகாரத்தலமாக உள்ளது.

சித்திராப் பவுர்ணமியில் பூச்சொரிதல் விழா, ஆடிப்பூர விழா, தீச்சட்டி ஏந்தும் விழா, புரட்டாசியில் நவராத்திரி விழா மற்றும் 10&ம் நாள் சூரனை வதம் செய்யும் விழா, மாசியில் மூன்றாம் ஞாயிறன்று பால் குடப்பெருவிழா ஆகியவை இந்த ஆலயத்தில் நடைபெறும் குறிப்பிடத்தக்க விழாக்கள் ஆகும். இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

சென்னை கடற்கரைச் சாலையில் கலங்கரை விளக்கம் மற்றும் ஆல் இண்டியா ரேடியோவில் இருந்து தென்மேற்கே அரை கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. அதேபோல, கபாலீசுவரர் திருக்கோவிலுக்கு வட கிழக்கே சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சென்றால் கோலவிழி அம்மன் ஆலயத்தை அடையலாம்.

கோல விழியம்மன் மயிலையில் எல்லை காளியாக இருப்பவள். எனவே மயிலாப்பூரில் உள்ள எந்த ஆலயத்தில் விழா நடந்தாலும் கோல விழியம் மனுக்குத்தான் முதல் மரியாதை கொடுக்கப்படும். மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் 63 நாயன்மார் விழா நடக்கும்போது அனைவருக்கும் முன்னதாக முதலில் செல்வது கிராம தேவதையான கோல விழியம்மன்தான்.

பத்ரகாளியாக இந்த கோலவிழியம்மன் முதலில் மிக, மிக உக்கிரமாக இருந்தாள். குறிப்பாக அவளது கண்பார்வையில் அதிக உக்கிரம் இருந்தது. ஆதிசங்கரர்தான் இந்த அம்மனின் உக் கிரத்தை தணித்தார். சக்கரம் ஸ்தாம்பிதம் செய்து அவர் கோல விழியம்மனை சாந்த சொரூபினியாக மாற்றினார். அகோரிகள் இந்த தலத்தில் 600 ஆண்டுகளுக்கு முன்பு தவம் இருந்து பூஜைகள் செய்து கோல விழியம்மனை வழிபட்டுள்ளனர். இந்த அம்மனை வழிபட்டால் எவ்வளவு கொடூரமான ராகு தோஷமும் உடனே விலகி விடும்.

இந்த தலத்தில் ஆஞ்ச நேயர், சப்தகன்னிகள்,வராகி ஆகியோருக்கு தனித் தனி சன்னதி உள்ளது. வராகியின் வாகனமான ஆமையும் இங்கு பிரதி ஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆமைக்கு இளநீர் அபி ஷேகம் செய்து வழி பட்டால் நோய் தீரும் என்பது ஐதீகம். 27 நட்சத்திரக்காரர்களும் இங்கு பிரதட்சணம் செய்து வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும்.

சிலர் 27 வாரம் பிரதட்சணம் செய்வதுண்டு. 9 வாரம் பிரதட்சணம் செய்தால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். இதனால் இத்தலத்துக்கு இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் வந்து வழிபட்டு செல்கிறார்கள். சந்திராஷ்டமம் நேரத்தில் ஏதாவது சொன்னாலோ, பேசினாலோ இடையூறு, பிரச்சினை ஏற்படும் என்று சொல்வார்கள். எனவே சந்திராஷ்டமம் உள்ள நாட்களில் உரியவர்கள் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டு சென்றால் சந்திராஷ்டமம் தாக்குதலால் எந்த பிரச்சினையும் வராது என்கிறார்கள்.

எல்லோராலும் இந்த தலத்துக்குள் எளிதில் காலடி எடுத்து வைத்து விட முடியாது. கடைசி ஜென்மத்தில் இருப்பவர்கள்தான் இந்த தலத்தில் வந்து பணிகளை செய்ய முடியும் என்று தனசேகர் பூசாரி தெரிவித்தார்.

ஆடி மாதத்தை முன்னிட்டு கோல விழி அம்மன் ஆலயத்தில் தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆடியில் தினமும் அம்மனுக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், ஆப்பிள், சாத்துக்குடி, இளநீர், பன்னீர், அபிஷேகப்பொடி, வெற்றிவேர், சந்தனம், மஞ்சள் ஆகிய 11 பொருட்களால் அபிஷேகம் நடத்தப்படுகிறது. வசதி, வாய்ப் புள்ள பக்தர்கள் இந்த அபிஷேக பொருட்களை வாங்கிக் கொடுத்து கோல விழி அம்மன் அருளைப் பெறலாம்.

ஆடி மாதத்தில் இந்த தலத்தில் நடக்கும் தீச்சட்டி ஊர்வலம் மிகவும் புகழ் பெற்றது. இந்த ஆண்டு இன்று (திங்கட்கிழமை) மாலை தீச்சட்டி ஊர்வலம் நடைபெற உள்ளது.

அன்று மாலை முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்தில் இருந்து தீச்சட்டி ஊர்வலம் தொடங்கும். 125 பேர் தீச்சட்டி ஏந்தி ஊர்வ லமாக கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு புறப்பட்டு வருவார்கள்.

தனசேகர் பூசாரி கரகம் எடுத்து முன்பு செல்ல அவரைத் தொடர்ந்து 125 பேரும் தீச்சட்டி ஏந்தி செல்வார்கள். இது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். தீச்சட்டி ஊர்வலம் ஆலயத்தை அடைந்ததும் கோலவிழி அம்மனுக்கு சிறப்பு பூஜை கள் நடைபெறும்.

ஆடி மாத விளக்கு பூஜை இத்தலத்தில் 16-ந்தேதி (வெள்ளிக் கிழமை) நடைபெற உள்ளது. 108 பெண்கள் விளக்கு பூஜையில் பங்கேற்பார்கள். 18-ந்தேதி (ஞயிற்றுக் கிழமை) மதியம் அம்மனுக்கு கூழ் வார்த்தல் நடைபெறும். அன்றிரவு கிராம தேவதைகளுக்குரிய அசைவ படையலுடன் கோலவிழி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். பிறகு அந்த அசைவ உணவு பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும்.

கோலவிழி அம்மன் ஆலயத்தில் நடை பெறும் ஆடி மாத விழாக்கள் தொடர்பாக தனசேகர் பூசாரியை 98842 10695 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

Similar News