ஆன்மிகம்
திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில்

திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில்

Published On 2019-07-19 01:29 GMT   |   Update On 2019-07-19 01:29 GMT
சென்னையில் உள்ள அம்மன் தலங்களில், எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் தலம் என்ற சிறப்பைப் பெற்ற தலம் திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயம்.
சென்னையில் உள்ள அம்மன் தலங்களில், எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் தலம் என்ற சிறப்பைப் பெற்ற தலம் திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயம்.

திருவேற்காடு ஆதிகாலத்தில் வேப்ப மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது. இதனால் அந்த பகுதியை வேலக்காடு என்று அழைத்தனர். அந்த வேலங்காட்டில் ஒரு பாம்புப்புற்று இருந்தது. பாம்பு வடிவில் அந்தப் புற்றில் கருமாரி இருந்து வருகிறாள் என்பது தெரிய வந்தது. மெல்ல, மெல்ல கருமாரியின் புகழ் பரவியது. பக்தர்கள் கருமாரியை தேடி வந்து குறிகேட்டு பலன் பெற்று சென்றனர்.

கடந்த நூற்றாண்டில்தான் இந்த அற்புதம் நடந்தது. நாளடைவில் வேலங்காடு திருவேற்காடு ஆகியது. கருமாரி அன்னை ஆலயம் எழுந்தது.  இந்த கருமாரி யார்ப நீண்ட நாட்களாக நாக வடிவில் மக்கள் அறியாதபடி இருந்ததற்கு என்ன காரணம்ப அதற்கு ஒரு புராண கதை உள்ளது.

துவாபரயுகம்...

கொடுங்கோலன் கம்சன் அநீதி ஆட்சி புரிந்து கொண்டிருந்தான்.  தன் தங்கை தேவகியை வசுதேவனுக்குக் கட்டிக் கொடுத்தான். தங்கையை அவளது கணவனுடன் அனுப்பிவைக்கும் நேரத்தில் ஆகாயத்திலிருந்து அசரீரி ஒன்று ஒலித்தது.  ‘கம்சா, உன் தங்கை தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்லும்’ ‘தன் தங்கையின் பிள்ளை தன்னைக் கொல்வதாப’ என்று ஆத்திரமடைந்து தேவகியையும் வசுதேவனையும் சிறையில் அடைத்தான் கம்சன்.

அவர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கொன்று வந்தான். ஏழு குழந்தைகள் கொல்லப்பட்டன. தேவகியின் எட்டாவது கர்ப்பம். அந்தக் கருவில் உதிக்க இருந்தவன் கண்ணன். அதே சமயம், ஆயர்பாடியில் நந்த கோபனின் மனைவி யசோதையும் கருவுற்றிருந்தாள். அவள் கருவில் குடி கொண்டிருந்தது மாயா எனும் சக்தி. தேவகிக்குக் குழந்தை பிறந்தது.

இறைவனின் எண்ணப்படி தேவகியின் குழந்தை ஆயர்பாடி போய்ச் சேர்ந்தது. யசோதையின் குழந்தையான மாயா சக்தி சிறைக்கு இடம் மாறியது. அதன் பின்னரே குழந்தை பிறந்த செய்தி கம்சனுக்குத் தெரியவந்தது. குழந்தையைக் கொல்ல கம்சன் குதூகலத்துடன் வந்து சேர்ந்தான். பிறந்திருப்பது பெண் குழந்தை என அறிந்து திகைத்தான். பிள்ளை அல்லவா பிறக்கப்போகிறது என அசரீரி அறிவித்திருந்தது.

இருந்தும் கம்சன், ‘உன்னை விட்டாலும் தவறு. ஆதலால் எங்கிருந்து வந்தாயோ அங்கேயே செல்’ என வானதிரச் சிரித்து வாளை ஓங்கினான் வெட்ட...

அவனுக்கு மேல் ஆயிரம் மடங்கு அதிகமாகச் சிரித்து விண்ணில் தாவியது அந்தக் குழந்தை.  ‘அடேய் ஆத்திரக்காரா. கருமாறி வந்த என் கழுத்தை நெரிக்கப்பார்க்கும் கல்நெஞ்சக் கம்சா! உன்னை வதைக்க என் அண்ணன் ஆயர்பாடியிலிருந்து இடையனாக எட்டு வயதில் வருவான்! அதுவரை காத்திரு’ என்று சொல்லி மறைந்தது.

கருமாறி விட்டதை உணர்ந்த கம்சன் கலக்கத்துடன் ‘கருமாறி’ என்றான். அக்கணமே ஆகாயம், பூமி அனைத்தும் ‘கருமாரி, கருமாரி’ என்று அழைக்கத் தொடங்கின. இப்படித்தான் கருமாரி உருவானாள். அசுரரை அடக்க, அன்னை சக்தி கருநீல நிறத்தில் பயங்கரமான உக்கிர உருவம் எடுத்தாள். திரிசூலம் ஒன்றைத் தன்முன் நட்டினாள். அன்னையின் உக்கிரம் தாங்காமல், அல்லல் விளைவித்த அசுரர்கள் அடங்கி ஒடுங்கினர்.

உக்கிர சக்தியை மகாவிஷ்ணு சாந்தப்படுத்தி, ‘கருமாரி.... உலக மக்கள் உய்வதற்கு உன் கடைக்கண் அருட்பார்வையே போதும். தலை காட்டி, உடல் மறை...’ என உள்ளன்போடு உரைத்தார்.  கருமாரி புன்முறுவலுடன் தலைகாட்டி, தன்னிலை மறைத்தாள். ஞாலத்து மக்கள் நாளும் வந்து வழிபட, எப்போதும் போல் ஓர் அழகிய வடிவமுடனும் எழுந்தருளினாள். மகாவிஷ்ணு சாந்தப்படுத்திய கருமாரி உருவம் நாரணி (நாராயணனின் பெண் வடிவம்) என்றும் கிருஷ்ணமாரி என்றும் அழகிய வடிவம் சிவை என்றும் (சிவனின் பெண் வடிவம்) அறியப்பட்டது.

காலத்துக்கு அப்பாற்பட்ட அகத்தியமுனிவர் அம்மையை இரட்டை உருவுடன் கூடிய இந்த நிலையில் கண்டு செந்தமிழால் போற்றித் துதித்தார்.
அம்மை அகத்தியருக்குக் காட்சி தந்தது தை மாதத்தில். பவுர்ணமி தினத்தில் பூச நட்சத்திரத்தில், ஞாயிற்றுக்கிழமையில், இந்த நாளே அன்னையின் அவதார தினமாகக் கருதப்படுகிறது.

காட்சியளித்த கருமாரி அகத்தியரிடம் சொன்னாள். ‘அகத்தியா, நீ வந்து வணங்கி வழிபடவே நான் காத்திருந்தேன். அசுரர் ஆணவம் அடங்கிவிட்டது. இனி நானும் பாம்பு உருக்கொண்டு புற்றில் அடங்கியிருக்கப் போகிறேன். மறுபடி கலியுகத்தில் காட்சியளிப்பேன் கலியின் கொடுமையால் வாடும் மக்களுக்கு சாம்பலைக் கொண்டே சாந்தி அளிப்பேன். அப்போது எனக்கு திருக்கோவிலும் தீர்த்தக் குளமும் அமையும். பரிவாரக் கடவுளர்களும் பாங்குடனே அமைவர்.’ அன்னை உரைத்தபடியே அனைத்தும் நடந்தேறின.

வேலங்காட்டில், வெள்ளை வேல மரத்தின் கீழ் பாம்புருவில் அன்னை, புற்றில் குடி கொண்டிருப்பது தெரிய வந்தது. அந்த இடத்தில் அவளுக்கோர் ஆலயம் எழுந்தது. இன்றைக்கு கருமாரியம்மன் ஆலயத்துக்கு நேர் எதிரே தீர்த்தக்குளம் அமைந்து இருக்கிறது. புற்று இருந்த இடத்தில் அம்மனின் திருவடிவச் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

புற்று, ஆலயத்தின் ஈசானமூலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. மஞ்சளும் குங்குமமும் துலங்கக் காட்சியளிக்கும் புற்றில் ஒரு திரிசூலம் எழுந்து நின்று, அன்னையை அடிபணிவோருக்கு அபயம் அளிக்கிறது. புற்றில் பாலையும் முட்டைக் கருவையும் இடைவிடாது சமர்ப்பிக்கிறார்கள் பக்தர்கள். கருணையே வடிவாய் இருந்த கருமாரித் தாயினை அவள் சந்நிதியில் சென்று தொடர்ந்து ஆறு வெள்ளிக் கிழமைகள் தரிசித்து வந்தால் வேண்டிய வரம் யாவற்றையும் விரும்பிய வண்ணமே அருளும் அன்னையவள் நம் கருமாரி ஆவாள். இத்தலத்து அன்னையை மணமாகாதவர்கள் வேண்டினால் அவர்கள் மனம் போலவே வாழ்க்கை அமையும்.

மலடி என தூற்றப்பெற்றவர்கள் கூட அன்னையின் பேரருளால் அழகும் அறிவும் கூடிய நன் மக்களைப் பெற்று அன்னைக்குத் தம் வேண்டுதல் காணிக்கையைச் செலுத்தி வருவதனையும் காணலாம். கொடிய, தீர்த்திட இயலாத நோய்கள் கூட அன்னையின் அருட்கடாட்சத்தால் நீங்கப் பெறுகின்றன.

இத்தகைய சிறப்புடைய திருவேற்காடு தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் நாளை (19-ந்தேதி) முதல் 8-10-2019 வரை ஆடி திருவிழா நடத்தப்பட உள்ளது. மொத்தம் 12 வாரங்கள் திருவேற்காடு ஆலயத்தில் ஆடித் திருவிழா நடைபெறும். அதன் விவரம் வருமாறு:-

19-7-2019- ஆடி முதல் வெள்ளிக்கிழமை சந்தன காப்பு அலங்காரம்
21-7-2019- ஆடி முதல் ஞாயிறு மஞ்சள் காப்பு அலங்காரம்
23-7-2019- ஆடி முதல் செவ்வாய் புற்றலங்காரம், 108 சங்கு அபிஷேகம்
26-7-2019- ஆடி 2-ம் வெள்ளி, ஆடி கிருத்திகை, சந்தன காப்பு, 3 முழுபடையல்கள், 3 கும்பங்கள்
28-7-2019- ஆடி 2-ம் ஞாயிறு நவகலசம் அபிஷேகம், 1008 சங்காபிஷேகம், தங்க கவசம்.
30-7-2019- ஆடி 2-ம் செவ்வாய் 108 குடம் பால் அபிஷேகம், 1008 சங்காபிஷேகம்.
31-7-2019- ஆடி அமாவாசை சந்தன காப்பு, முழு படையல்
2-8-2019 - ஆடி 3-ம் வெள்ளிக்கிழமை சந்தன காப்பு, அரை படையல், தங்க ரதம்.
3-8-2019 - ஆடிப்பூரம் மற்றும் ஆடி 18-ம் பெருக்கு மாலை 5 மணிக்கு அபிஷேகம், சந்தன காப்பு, இரவு 8 மணிக்கு அம்மன் வீதி உலா.
4-8-2019 - ஆடி 3-ம் ஞாயிறு 108 குடம் தயிர் அபிஷேகம், இரவு 7 மணிக்கு அம்மன் பண்டாசூரன் வாகனத்தில் வீதிஉலா.
6-8-2019 - ஆடி 3-ம் செவ்வாய் 1008 சங்காபிஷேகம், தங்க கவசம், மாலை 4 மணிக்கு குங்கும அர்ச்சனை.
9-8-2019 - ஆடி 4-ம் வெள்ளி 108 சங்காபிஷேகம்-.
11-8-2019 - ஆடி 4-ம் ஞாயிறு 108 குடம் பஞ்சாமிர்த அபிஷேகம், இரவு 7 மணிக்கு அம்மன் வாகனத்தில் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் வீதி உலா.
13-8-2019 - ஆடி 4-ம் செவ்வாய் வெற்றிலை காப்பு
16-8-2019 - ஆடி 5-ம் வெள்ளி சந்தன காப்பு
18-8-2019 - 5-ம் ஞாயிறு 108 குடம் பன்னீர் அபிஷேகம், இரவு 7 மணிக்கு அம்மன் வாகனத்தில் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் வீதி உலா.
20-8-2019 - 5-ம் செவ்வாய் சந்தன காப்பு
23-8-2019 - 6-ம் வெள்ளி சந்தன காப்பு
25-8-2019 - 6-ம் ஞாயிறு 108 குடம் விபூதி அபிஷேகம், இரவு 8 மணிக்கு ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் வீதி உலா
27-8-2019 - 6-ம் செவ்வாய் சந்தன காப்பு.
30-8-2019 - 7-ம் வெள்ளி தங்க கவசம், முழு படையல்.
1-9-2019 - 7-ம் ஞாயிறு 108 குடம் சந்தன அபிஷேகம், மாலை 6 மணிக்கு அம்மன் காமாட்சி ரிஷப வாகனத்தில் வீதி உலா.
2-9-2019 - விநாயகர் சதுர்த்தி, மூஷிக வாகனத்தில் வீதி உலா.
3-9-2019 - 7-ம் செவ்வாய் 1008 சங்காபிஷேகம்
6-9-2019 - 8-ம் வெள்ளி 1008 சங்காபிஷேகம்
8-9-2019 - 8-ம் ஞாயிறு 108 குடம் இளநீர் அபிஷேகம், இரவு 8 மணிக்கு அம்மன் வீதி உலா.
10-9-2019 - 8-ம் செவ்வாய் மஞ்சள் காப்பு
13-9-2019 - 9-ம் வெள்ளி சந்தன காப்பு
15-9-2019 - 9-ம் ஞாயிறு காலை 7 மணிக்கு அம்மன் திருத் தேரில் உலா வருதல், 11 மணிக்கு அம்மனுக்கு நல்லெண்ணை அபிஷேகம், இரவு 8 மணிக்கு அம்மன் மான் வாகனத்தில் வீதி உலா.
17-9-2019 - 9-ம் செவ்வாய் சந்தன காப்பு
20-9-2019 - 10-ம் வெள்ளி 1008 சங்காபிஷேகம், சந்தன காப்பு
22-9-2019 - 10-ம் ஞாயிறு 108 குடம் மஞ்சள் அபிஷேகம், இரவு 7 மணிக்கு அம்மன் வீதி உலா.
24-9-2019 - 10-ம் செவ்வாய் பகல் 11 மணிக்கு 1008 சங்காபிஷேகம், மஞ்சள் காப்பு
27-9-2019 - 11-ம் வெள்ளி 108 சங்காபிஷேகம்
29-9-2019 - 11-ம் ஞாயிறு 108 குடம் கனிகள் அபிஷேகம், இரவு 7 மணிக்கு அம்மன் மேஷ வாகனத்தில் வீதி உலா.
1-10-2019 - 11-ம் செவ்வாய் சந்தன காப்பு
4-10-2019 - 12-ம் வெள்ளி சந்தன காப்பு
6-10-2019 - 12-ம் ஞாயிறு 108 குடம் மலர் அபிஷேகம், மாலை 6 மணிக்கு 108 சங்காபிஷேகம், இரவு 8 மணிக்கு அம்மன் புஷ்பபல்லக்கில் ஊர்வலம்.
8-10-2019 - 12-ம் செவ்வாய் தங்க கவசம்
13-10-2019 - நிறைமணி காட்சி ஆரம்பம்

15-10-2019 - மாலை 4 மணிக்கு நிறைமணி காட்சி பூர்த்தி. இத்துடன் ஆடி திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.
திருவேற்காடு ஆலயத்தில் நடைபெறும் ஆடி திருவிழா நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்களை - 2680 0430 மற்றும் 2680 0487 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.
Tags:    

Similar News