ஆன்மிகம்

அச்சம் போக்கும் அங்காள பரமேஸ்வரி கோவில்

Published On 2019-02-28 02:39 GMT   |   Update On 2019-02-28 02:39 GMT
அங்காள பரமேஸ்வரிக்கு திருக்கடையூரில் ஓர் ஆலயம் உள்ளது. அழகிய அந்த ஆலயம் தென் திசை நோக்கி அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் அங்காள பரமேஸ்வரிக்கு ஏராளமான ஆலயங்கள் உள்ளன. அவற்றில் பல கிராமப்புறங்களிலேயே அமைந்துள்ளன. இந்த ஆலயங்களில் மகா சிவராத்திரியின் போது திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். ஊர் மக்கள் தம் வீட்டு விழாவைப் போலவே இந்த திருவிழாவை கொண்டாடுவார்கள். அங்காள பரமேஸ்வரிக்கு திருக்கடையூரில் ஓர் ஆலயம் உள்ளது. அழகிய அந்த ஆலயம் தென் திசை நோக்கி அமைந்துள்ளது.

முகப்பைத் தாண்டியதும் விரிந்த பிரகாரமும், அடுத்து மகாமண்டபமும் உள்ளன. மகா மண்டபத் தூண்களில் கண்களைக் கவரும் வண்ணங்களில் சுதை வடிவ அஷ்டலட்சுமிகளின் திருமேனிகள் காட்சி தருகின்றன. மகாமண்டபம் நடுவில் பலி பீடமும், நந்தியும் இருக்க, அர்த்த மண்டப நுழைவு வாசலில் இரு துவாரபாலகர்கள் காவல் காத்து நிற்கின்றனர். கருவறையில் அன்னை அங்காள பரமேஸ்வரி அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் தென் முகம் நோக்கி அருள்பாலிக் கிறாள்.

அன்னையின் மேல் இரு கரங்கள் சூலம், உடுக்கையை தாங்கியிருக்க, கீழ் இரு கரங்கள் கத்தியையும் கபாலத்தையும் பற்றி இருக்கின்றன. அன்னையின் அருள் சுரக்கும் இன்முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம்; அத்தனை அழகு.

மகாமண்டபத்தின் தென்புறம் சப்த கன்னியர், பாவாடைராயன், பேச்சியம்மன் திருமேனிகள் உள்ளன. அர்த்த மண்டப நுழைவு வாசலின் இடது புறம் வலம்புரி விநாயகரும், வலது புறம் பாலமுருகனும் அருள் பாலிக்கின்றனர். கிழக்கில் பைரவர் திருமேனி உள்ளது.

இந்த அங்காள பரமேஸ்வரியின் கதை என்ன?

தனக்கு ஐந்து தலை வேண்டுமென சிவபெருமானிடம், பிரம்மதேவன் வேண்டினார். அதன்படியே அவருக்கு ஐந்து தலைகள் உருவானது. ஒரு நாள் கயிலாயத்திற்கு வந்தார் பிரம்மன். ஐந்து தலைகள் இருந்ததால் அவரை சரியாக கவனிக்காமல், ஈசன் என்றே நினைத்துக் கொண்டாள். அதே நேரத்தில் சிவபெருமானும் அங்கு வந்தார். தலைகளின் எண்ணிக்கையால் ஒரு நொடி குழப்பத்தில் ஆழ்ந்ததால் வருந்திய பார்வதி, “பிரம்மாவின் ஐந்தாவது தலையை கொய்து விடுங்கள்” என சிவபெருமானிடம் வேண்டினாள். அதன்படி பிரம்மாவின் ஐந்தாவது தலையை துண்டித்தார், சிவபெருமான்.

ஆனால் பிரம்மனின் அந்த கபாலம், சிவபெருமான் கையில் ஒட்டிக் கொண்டது. நடந்ததை அறிந்த சரஸ்வதி தேவி கோபம் கொண்டாள்.

“நீர் பிரம்மஹத்தி தோஷம் பிடித்து, மயானம் தோறும் அலைந்து திரிவீர்” என்று சிவபெருமானுக்கும், “நீ கோர உருவம் கொண்டு செடி கொடிகளை அணிந்து, பூத கணங்களுடன் காடு தோறும் அலைவாய்” என்று பார்வதிக்கும் சாபமிட்டாள்.



அதன்படியே சிவபெருமானை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. சிவபெருமான் பிச்சாண்டியாக உருமாறி யாசகம் பெறத் தொடங்கினார். பார்வதி சுய நினைவின்றி பசி தாளாது, மயானத்தில் கிடைக்கும் பிணங்களைத் தின்று பசியாறினாள். இவர்களின் நிலை மையை கண்டு வேதனை அடைந்த மகாவிஷ்ணு, மோகினி உருவம் கொண்டு சரஸ்வதியிடம் சென்றார். இருவரின் சாப விமோசனம் பற்றி தெரிந்து கொண்டு அதை சிவபெருமானிடமும், பார்வதியிடமும் கூறினார்.

சிவபெருமான் கையில் ஒட்டியிருந்த கபாலம், பிச்சை மூலம் நிரம்பினால் தான் சிவபெருமானின் சாபம் விலகும். ஆனால் எவ்வளவு பிச்சையிட்டாலும் அந்த கபாலம் நிரம்பவே இல்லை. உடனே அங்காளம்மனாக உருவெடுத்த பார்வதி, மகாலட்சுமியின் உதவியுடன் பிரம்மதேவனின் கபாலத்தை காலால் மிதித்துக் கொண்டாள். சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.

“நான் எப்போது உங்களை வந்து சேர்வது?” என்று அங்காள பரமேஸ்வரி உருவில் இருந்த பார்வதி, சிவபெருமானிடம் கேட்டாள். அதற்கு ஈசன், “மாசி மாத சிவராத்திரியின் போது என்னுள் நீ கலப்பாய். அதுவரை உன்னுடைய நெற்றிப் பொட்டில் நான் வாசம் செய்வேன்” என்றார். அதன்படி சிவராத்திரியின் போது பார்வதி சாபவிமோசனம் பெற்று சிவபெருமானுடன் இணைந்தாள் என்பது தல வரலாறு.

இந்த ஆலயத்தில் சிவராத்திரியின் போது மயானத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில், முதல் நாள் தீச்சட்டி, அக்னி கொப்பரை ஏந்தி பக்தர்கள் ஆலயத்தை வலம் வருவார்கள். மாலையில் அன்னை வீதியுலா வருவார். இரண்டாம் நாள் மாலை அங்காள பரமேஸ்வரியாய் வேடம் அணிந்த மருளாளி, சூலத்தோடு ஆவேசத்துடன் ஆடுவார். ஆலயம் முன்பு ஏராளமான ஆடுகள் பலியிடப்படும்.

பிறகு இரவு 2 மணிக்கு மயானத்திற்கு செல்லும் மருளாளி, அங்கேயே படுத்துக் கொள்வார். பின் பாடல்கள் பாடி அவரை ஆலயம் அழைத்து வருவார்கள். மூன்றாம் நாள் மஞ்சள் நீராட்டுடன் விழாவானது நிறைவு பெறும். இரவு அன்னை வீதியுலா வருவார்.

இந்த ஆலயத்தைச் சுற்றி மதில் சுவர்களும், ஆலய முகப்பை ஒட்டி தல விருட்சங்களான அரசும் வேம்பும் உள்ளன. தன்னை ஆராதிக்கும் பக்தர்களின் அச்சத்தை போக்கி, அவர்களது அனைத்து குறைகளையும் நீக்கி அருள்கிறாள் அங்காள பரமேஸ்வரி அம்மன். எனவே இத்தலம் குறை நிவர்த்தி தலமாக விளங்குவதில் வியப்பில்லை.

அமைவிடம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவில், காரைக்கால் செல்லும் வழித்தடத்தில் அமைந்திருக்கிறது திருக்கடையூர். பஸ் நிறுத்தத்தில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும். திருக் கடையூருக்கு ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.
Tags:    

Similar News