ஆன்மிகம்

பழமை வாய்ந்த புராதனவனேஸ்வரர் கோவில்

Published On 2018-01-10 04:04 GMT   |   Update On 2018-01-10 04:04 GMT
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் பழமை வாய்ந்த புராதனவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் பழமை வாய்ந்த புராதனவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சிறப்புகள் பற்றி திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பாடியுள்ளனர். மதுரை சவுண்ட கோப்பர கேசவர்மன், ராஜகேசரி வர்மன், ராஜேந்திர சோழ தேவன், திரிபுவன சக்கரவர்த்தி ராஜராஜ தேவன், வரகுண மகாராஜன், வீரபாண்டியன், சுந்தர பாண்டியன், விஜயநகரத்து வேங்கடபதிராயர் ஆகியோர் இந்த கோவிலில் திருப்பணிகள் செய்துள்ளனர். இத்தல இறைவியின் திருநாமம் பெரியநாயகி என்பதாகும். இந்தக் கோவிலுக்கு அருகிலேயே எமதர்மராஜனுக்கு தனிக்கோவில் இருக்கிறது.

தல வரலாறு :

பழங்காலத்தில் திருச்சிற்றம் பலத்தை சுற்றி அடர்ந்த காடுகள் (வனம்) இருந்தன. இதை நிரூபிக்கும் வகையில் திருச்சிற்றம்பலத்தை சுற்றியுள்ள ஊர்களின் பெயர்கள் காடு என முடியும். உதாரணமாக துறவிக்காடு, மடத்திக்காடு, சித்துக்காடு, நரியங்காடு, நாடங்காடு, வலசக்காடு, வலச்சேரிக்காடு, கல்லூரணிக்காடு, திருப்பூரணிக் காடு ஆகும். இந்த ஊரின் மையப்பகுதியான திருச்சிற்றம் பலத்தில் நந்தவனம் ஒன்று உள்ளது.

இந்த நந்தவனத்தில் பரவியிருந்த இனிய காற்றாலும், மலர்களின் நறுமணத்திலும் மயங்கி சிவபெருமான் நித்திரையில் ஆழ்ந்தார். பார்வதி தேவி, பலமுறை அழைத்தும் சிவபெருமான் கண்விழிக்கவில்லை. உடனே பார்வதி, மன்மதனை அழைத்து பாட செய்தார். கண்விழித்த சிவபெருமான், கோபத்தில் மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்தார். அந்த இடம் ‘மதன்பட்டவூர்’ என்றானது. இந்த ஊரில் மன்மதனுக்கு என்று கோவில் உள்ளது.

மன்மதனை இழந்து வருந்திய ரதிதேவி, தன் கணவன் உயிரை மீண்டும் தரும்படி சிவபெருமானிடம் வேண்டினாள். அவளின் வேண்டுதலுக்கு மனம் இரங்கிய சிவபெருமான், இத்தலத்திற்கு அருகில் உள்ள ஒரு தலத்தில் மன்மதனை உயிர்பித்தார். அப்போது எமதர்மன், சிவனிடம் தனக்கு அழிக்கும் பணி கொடுத்திருக்கும் போது, அதனை சரிவர செய்ய தனக்கு அனுமதி அளிக்கும் படி வேண்டினார். சிவனும் அவ்வாறே அருள்பாலித்தார். இதன் அடிப்படையிலேயே பிற்காலத்தில் புராதனவனேஸ்வரர் கோவிலுக்கு அருகே எமதர்மனுக்கு கோவில் கட்டப்பட்டதாக தலவரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

இங்கு எமதர்மராஜன் தனிக்கோவிலில் வீற்றிருக்கிறார். அவர் எருமை வாகனத்தின் மீது அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முறுக்கி விடப்பட்ட மீசையுடன் மேற்கு திசை நோக்கி அமர்ந்துள்ளார். அவரது நான்கு கரங்களில் ஒன்றில் கையில் பாசக்கயிறும், மற்றொரு கையில் சுவடி கட்டும், ஒரு கையில் கதையும், மற்றொரு கையில் சூலாயுதத்தை ஏந்தியபடி இருக்கிறார்..

நீண்ட ஆயுள், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், செய்வினை கோளாறுகள், கடன் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டம், சொத்து பிரச்சினை, கல்வி தடை உள்பட பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி இத்தலத்திற்கு வருபவர்கள் நிறைய பேர். அவ்வாறு வருபவர்கள் முதலில் நீதி வழங்கும் எமதர்மராஜனை மனதார வேண்டுவர். பின்னர் தங்களது வேண்டுதல்களை சீட்டில் எழுதி அங் குள்ள சூலாயுதத்தில் கட்டுவர். இதற்கு ‘படிக்கட்டு தல்’ என்று பெயர்.

இத்தலத்தில் சனிக்கிழமை தோறும் எமகண்ட நேரமான மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை வழிபடுவது நல்லது. அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இதுதவிர ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.

கோவில் அமைப்பு :

இவ்வாறு பல்வேறு சிறப்பு கள் பெற்ற இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவுற்ற நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த கோவிலில் தர்ம விநாயகர், அய்யனார், பூர்ணகலா, புஷ்பகலா, பாம்பு பிடாரன், தூண்டில் வீரனார், ஆண்டியப்பர், ராக்காச்சியம்மன், கருப்பண்ண சுவாமி, கொம்புக்காரன், முனீஸ்வரன், வடுவச்சியம்மன் ஆகிய பரிவார தெய்வங்கள் எமதர்மராஜன் கோவிலைச் சுற்றி தனிசன்னிதியில் வீற்றிருக்கின்றனர். இந்த கோவிலின் தல விருட்சம் விளாமரம் ஆகும்.

தீர்த்தம் :

கோவில் வளாகத்திலேயே எம தீர்த்தம் அமைந்துள்ளது. 30 அடி ஆழம், 80 அடி நீளம், 50 அடி அகலத்துடன் இந்த தீர்த்தம் அமைந்துள்ளது. எமதர்மராஜனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த தீர்த்தத்தில் நீராடுவதற்கு பெண்களுக்கு அனுமதி கிடையாது. ஆதலால் ஆண்கள் மட்டுமே இந்த தீர்த்தத்தில் நீராடுகின்றனர். உடல் நலம், மனநலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, எமதர்மராஜனை வழிபட்டால் நலம் பெற்று விடுவர் என்பது ஐதீகம்.

வழியும்.. தூரமும்.. :

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகே திருச்சிற்றம்பலத்தில் உள்ளது. பட்டுக்கோட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி, புதுக்கோட்டை செல்லும் பஸ்சில் சென்றால் இத்தலத்திற்கு செல்லலாம். திருச்சிற்றம்பலம் கடை வீதியில் இறங்கி சற்று தூரம் நடந்து சென்றால் எமதர்மராஜன் கோவிலை அடையலாம்.
Tags:    

Similar News