ஸ்லோகங்கள்
வீரராகவர்

வீரராகவர் போற்றிப் பஞ்சகம்

Published On 2022-04-30 07:57 GMT   |   Update On 2022-04-30 07:57 GMT
வீரராகவப்பெருமாளை, திருமங்கை ஆழ்வார், “எவ்வுள் கிடந்தான்”என்றும் திருமழிசை ஆழ்வார், “எவ்வுள் பெருமலை” என்றும் தமது பதிகங்களில் புகழ்ந்து பாடியுள்ளனர்.
தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றி
வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி
அண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
விண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி.

பாண்டவர் தூத னாகப் பலித்தருள் பரனே போற்றி
நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி
தூண்டலில் லாமல் ஓங்குஞ் ஜோதிநல் விளக்கே போற்றி
வேண்டவர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி
கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி
ஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி
வேதியன் தன்னை ஈன்ற வீரரா கவனே போற்றி.

இளங்கொடி தனைக்கொண் டேகும் இராவணன் தனைய ழித்தே
களங்கமில் விபீட ணர்க்குக் கனவர சளித்தாய் போற்றி
துளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி
விளங்குநல் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

அற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி
பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி
வற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி
வெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
Tags:    

Similar News