ஸ்லோகங்கள்
மூவாயிரம் பாடல்கள் அடங்கிய இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம்.
ஈசனையும், அவனை பற்றிக்கொண்டு முக்தியை அடையும் வழியையும், அன்பே சிவம் என்பதையும் பற்றி திருமூலரால் பாடப்பட்ட நூல்தான், திருமந்திரம். மூவாயிரம் பாடல்கள் அடங்கிய இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவன் அருளாமே.
விளக்கம்:-
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ‘அவம்’ என்ற சொல் ‘ஆணை’ என்ற பொருளைத் தருகிறது. அதன்படி ஆணையின் பிறப்பிடமே சிவத்தின் இருப்பிடம் என்பதை அறியாதவர்கள், எதையுமே அறியாதவர்கள்தான்.
மாறாக ஆணையின் பிறப்பிடம் சிவனின் இருப்பிடம் என்பதை அறிந்து உணர்ந்தவர்கள், அனைத்தும் அறிந்தவர்கள் ஆவர். ஆணையும், அதைப்பிறப்பிக்கும் ஈசனும் ஒன்றென உணரும் அருள் அறிவானது, சிவபெருமானின் அருளைப் பெற்றால் மட்டுமே கிடைக்கும்.
அந்த அருளைப் பெற்றவர்கள், ஒவ்வொரு ஆணையையும் சிவமாகவும், அவனின் கட்டளையுமாகவே இருப்பதை உணர்ந்துகொள்வார்கள்.