முக்கிய விரதங்கள்

ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி விரதமும்... பலன்களும்...

Published On 2022-09-13 04:48 GMT   |   Update On 2022-09-13 04:48 GMT
  • ஆவணி மாதத்திலேயே வருகின்ற சங்கடஹர சதுர்த்தி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
  • இன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் திருமண தடை நீங்கும்.

ஆவணி மாதத்தில் பல தெய்வங்களுக்குரிய பண்டிகை தினங்கள் வருகின்றன. இந்த ஆவணி மாதத்தில் தெய்வங்களுக்குரிய வழிபாடு மற்றும் விரதம் இருப்பதால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிச்சயமான வெற்றியை பெறும் என்பது பெரியோர்களின் அனுபவமாக இருக்கிறது. ஆவணி மாதத்திலேயே வருகின்ற சங்கடஹர சதுர்த்தி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. காரணம் இந்த ஆவணி மாதத்தில் தான் விநாயகருக்குரிய விநாயகர் சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆவணி சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் உப்பு சேர்க்காத உணவு அல்லது பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் மற்றும் வாசமிக்க மலர்கள், மஞ்சள், விபூதி போன்ற அபிஷேக பொருட்களை தந்து, அபிஷேக பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து விநாயகரை வணங்கி பூஜையறையில் நைவேத்தியம் வைக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டு விரதத்தை முடித்து கொள்ளலாம்.

ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட காலமாக திருமண தாமதமானவர்களுக்கு திருமணம் நடக்கும். புதிய வீடு, மனை போன்ற சொத்துகள் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் விலகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் பாதிப்புகள் நீங்கி அவர்கள் கல்வியில் சிறக்க செய்யும். தொழில், வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகும்.

Tags:    

Similar News