முக்கிய விரதங்கள்
சிவன் வழிபாடு

இந்த ஆண்டுக்கான முதல் சனி மஹாப்பிரதோஷம்... இதை செய்தால் பாவங்கள் விலகிடும்

Published On 2022-01-15 03:00 GMT   |   Update On 2022-01-15 03:00 GMT
சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷ விரத வழிபாடு. இன்று சிவன் ஆலத்திற்கு சென்று வழிபாடு செய்தால் 5 வருடம் ஆலயம் சென்ற பலன் கிட்டும்.
சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானதாகும். பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் அகன்றுவிடும்.

சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனி மஹாப்பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.

சனி பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும், சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.

பிரதோஷ நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

சிவாலயங்களில் சிவனுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.

அவருடைய வாகனமான நந்திதேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காக தரலாம். பின் அருகம்புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம்.

நந்திதேவரது தீபாராதனைக்கு பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?

கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் அடைக்கப்பட்டுள்ளன. அதனால் கோவிலுக்கு செல்ல முடியவில்லையே என்று வருத்தம் கொள்ளாமல் வீட்டிலேயே நாள் முழுவதும் விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து மாலையில் சிவனை மனதார நினைத்து தரிசனம் செய்யுங்கள்.

வீட்டில் சிவன்-பார்வதி, சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் வைத்து விளக்கேற்றி வழிபடலாம்.

பிரதோஷ தினத்தில் விரதம் இருப்பதோடு சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்குரிய மந்திரங்களை உச்சரித்து சிவனை தரிசிக்கலாம்.
Tags:    

Similar News