ஆன்மிகம்
குரு பகவான்

சுப பலன்களைத் தரும் குரு பகவான் விரதம்

Published On 2019-07-04 01:44 GMT   |   Update On 2019-07-04 01:44 GMT
ஜனன கால ஜாதகத்தில் குருவின் பலம் குறைந்தவர்கள் விரதம் இருந்து குருவின் ஸ்தலமான ஆலங்குடி சென்று வழிபாடு செய்ய வேண்டும். திருச்செந்தூர்சென்று முருகனையும் விரதம் இருந்து வழிபடலாம்.
நவக்கிரகங்களில் முழுமையான சுப கிரகமாக திகழ்பவர், குரு பகவான். இவர் மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு. ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும், குரு பார்வை இருந்தால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் மிகும். எனவேதான் ஜோதிட சாஸ்திரம் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று கூறுகிறது. குரு இருக்கும் இடத்தை வைத்து ஒரு ஜாதகத்தில் குழந்தைகளின் நிலையை அறியமுடியும் என்பதால், இவர் ‘புத்திர காரகன்’ என்றும் அழைக்கப்படுகிறார். மனிதனின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் பணத்திற்கு அதிபதி என்பதால் ‘தன காரகன்’ என்றும் போற்றப்படுகிறார். குருவிற்கு ‘ஜீவன காரகன்’ என்ற பெயரும் உண்டு.

வியாழன் கிரகத்தில் இருந்து வெளிப்படும் மஞ்சள் நிறக் கதிர்கள், சூரிய ஒளியோடு கலப்பதால்தான் பூமியில் உயிரினங்கள் தோன்றுகிறது.

ஜனன கால ஜாதகத்தில் குரு பலம் பெற்றவர்களுக்கு, உடல் ஆரோக்கியம், மன அமைதி, ஆன்மிகச் சிந்தனை, தெய்வ பக்தி, நல்ல புத்திரர், நல்ல அறிவு, கற்பு, மந்திர சாஸ்திரம், தெய்வ தரிசனம், தீர்த்த யாத்திரை, ஆன்மிக குருக்களின் நட்பு, சமுதாயத்தில் நல்ல மதிப்பு, செல்வாக்கு, பணம் ஆகிய நற்பலன்கள் தானாக வந்து விடும். அத்துடன் குழந்தைகளிடம் அதிக அன்பு உண்டாகும். புண்ணிய காரியங்கள் செய்வதில் நாட்டம் ஏற்படும்.

தனுசு, மீன லக்னம் அல்லது தனுசு, மீன ராசியில் பிறந்தவர்களிடம் நட்பு பிறக்கும். குருவின் நட்சத்திரமான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் தொடர்பு ஏற்படும். முக்கிய நிகழ்வுகள் எல்லாம் குரு ஓரையில் நடக்கும். குரு வழிபாடு செய்வதில் ஆர்வம் பெருகும். குரு வழிபாடு செய்யும் பக்தர்களுடன் நட்பாவீர்கள். புண்ணியத் தலங்களுக்கு தீர்த்த யாத்திரை சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். மஞ்சள் நிற ஆடைகளின் சேர்க்கையும், மஞ்சள் நிற ஆடைகள் அணிவதில் விருப்பமும் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உருவாகும். ஆசிரியர்களின் நட்பு கிடைக்கும். ஆலய திருப்பணியில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.

ஜனன கால ஜாதகத்தில் குருவின் பலம் குறைந்தவர்களுக்கு, குழந்தைகளால் அவப்பெயர், ஆரோக்கியமின்மை, ஆன்மிக நாட்டக் குறைவு, பொருளாதார வளர்ச்சி குறைவு போன்றவை ஏற்படும். அதுபோன்ற குறைபாடு உள்ளவா்கள், விரதம் இருந்து குருவின் ஸ்தலமான ஆலங்குடி சென்று வழிபாடு செய்ய வேண்டும். திருச்செந்தூர்சென்று முருகனையும் விரதம் இருந்து வழிபடலாம். தவிர வசதி இல்லாதவர்களின் திருமணத்திற்கு தாலிக்கு பொன் தானம் தரலாம். யானைக்கு கரும்பை உணவாக கொடுக்கலாம். வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து சித்தர்களின் ஜீவ சமாதி சென்று வழிபடலாம். வியாழன் அன்று கொண்டைக்கடலையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
Tags:    

Similar News